கே.பியின் பேட்டி புலம் பெயர் தமிழருக்கு புதிய புத்திமதி
July 30, 2010
2003 ல் இருந்து காஸ்ரோவிடம் பதவி கொடுக்கப்பட்டுவிட்டது
கோத்தபாயவையும் அவருடைய புத்தர் சிலையையும் பார்த்ததும் என் பயம் தெளிந்தது..
இறுதிக் கட்ட போரின்போது எனது பேச்சை கேட்க தவறி விட்டார் பிரபாகரன் . இதனால்தான் அவர் கொல்லப்பட நேரிட்டது. அவர் மட்டும் எனது பேச்சைக் கேட்டிருந்தால், இலங்கை அரசுடன் உடன்பட்டு செல்ல முன்வந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேபி.
கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக அறிவித்த சிங்கள அரசு, ஆகஸ்ட் மாதம் கேபியை மலேசியாவில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்தின் முகாமில்தான் வசித்து வருகிறார் கேபி.
ஒரு காலத்தில் பிரபாகரனின் வலதுகரமாக கருதப்பட்டவர் கேபி. ஆனால் இன்று இலங்கை அரசின் கைப்பாவையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவத்தின் பிடியில் உள்ள கேபி, உபாலி நிறுவனத்துக்குச் சொந்தனமான ஐலன்ட் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். (சிறிலங்காவில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இனவாதத்தை கக்கி வருகின்ற பத்திரிகைகளில் இப்பத்திரிகை முதன்மை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது)
அதில் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
கைதுக்குப் பின்னர் கேபி அளித்துள்ள முதல் பேட்டி இது. பேட்டியிலிருந்து சில பகுதிகள்…
4வது ஈழப் போரின் திருப்பு முனை எது என்று கருதுகிறீர்கள்?
அமெரிக்காவில் அல் கொய்தா அமைப்பினர் நடத்திய அதி பயங்கரத் தாக்குதல்தான் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. அந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மேற்கத்திய சக்திகள் தலைமையிலான அனைத்து நாடுகளும் அனைத்து ஆயுதம் தாங்கிய குழுக்களையும் அபாயகரமானவை என்று அறிவித்தன. இது எங்களது நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது.
அல் கொய்தாவின் அதிவேக வளர்ச்சியால் ஒட்டுமொத்த ஆயுதக் குழுக்களும் பாதிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகள் ஆயுதப் போராட்டம் குறித்த தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள நேரிட்டது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்.
பிரிவினைவாத கருத்துக்களைப் பரப்புவதில் பெரும் சிரமங்கள் ஏற்படத் தொடங்கின. துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சில முக்கியத் தலைவர்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்பட யாருமே இந்த புதிய சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை. தங்களது உத்தியை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை.
அதை அவர்கள் செய்திருந்தால், செய்ய முன்வந்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். இன்று புதிய உலக நடைமுறை உள்ளது. இது ஆயுதப் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாது. இதை உணர வேண்டும். அதுதான் உண்மையும் கூட.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி உங்களுக்கு எப்போது கிடைத்தது. அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?
மே 19ம் தேதி எனக்கு பிரபாகரன் மரணச் செய்தி கிடைத்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். சர்வதேச மீடியாக்கள் இந்த செய்தியை முரண்பட்டு வெளியிட்டுக் கொண்டிருந்தன. சில மீடியாக்களில் மரணச் செய்தி குறித்து சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வந்தன. நான் பிரபாகரனின் மிகச் சிறந்த நண்பன். இதனால், அவருடைய உயிரிழப்பு குறித்து அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தேன்.
அவர் எனது பேச்சைக் கேட்டிருந்தால், அரசுடன் உடன்பாட்டுக்கு ஒத்து வந்திருந்தால் இது நடந்திருக்காது. இறுதிப் போரில் நடந்தவை தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் எல்லாமே கால தாமதமாகி விட்டது.
மே 10ம் தேதி வன்னிக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 400 அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நான் அரசியல் பிரிவு தலைவர் நடேசனுடன் பேசினேன். ஆனால், ராணுவத் தாக்குதலை தடுக்க முடியும், 3வது தரப்பின் மூலமாக சமரசம் பேச முடியும் என அவர்கள் நம்பினர்.
நாங்களும் கூட பலருடன் பேசினோம். பல அமைப்புகளுடன் பேசினோம். ஐ.நாவுடன் கூட பேசினோம். சில ஏற்பாடுகளை செய்ய முயற்சித்தோம். ஆனால் எல்லாமே தோல்வியல் முடிந்தன. இது பிரபாகரன் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தாமதத்தால் ஏற்பட்டது. விரைந்து செயல்பட அவர் தவறி விட்டார்.
புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதியைப் பெற்று மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த நீங்கள் சமீபத்தில் ஒரு என்ஜிஓ அமைப்பை உருவாக்கினீர்கள். அதற்கு என்ன பலன் கிடைத்துள்ளது?
வடக்கு-கிழக்கு மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சிக் கழகம் என்பது அதன் பெயர். இப்பிராந்தியத்தில் மறு சீரமைப்பு, புதுக் கட்டமைப்பு மற்றும் மறு குடியேற்ற நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இந்த அமைப்பு தயாராக உள்ளது.
இதன் தலைமை அலுவலகம், வவுனியா, வைரவபுதியன்குளத்தில் அமைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக இது பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. எங்களது மக்கள் குறிப்பாக குழந்தைகள் நலன் குறித்து நாங்கள் பெரிதும் அக்கறை காட்டுகிறோம்.
இந்தப் போரினால் மக்கள் பெரும் சோர்வடைந்து விட்டனர். எனவே அந்த பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும். அதில் எந்தவித அரசியலும் கலக்காமல், மனிதாபிமான நடவடிக்கை மட்டுமே மேலோங்கி நிற்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
ஒரு டாலரிலிருந்து எத்தனை டாலர் வரை வேண்டுமானாலும் நிதியாகத் தாருங்கள் என்று புலம் பெயர்ந்த தமிழர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மாதாந்திர அடிப்படையில் இந்த நிதியை அவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த நிதி வசூலை மேற்கொள்வதற்கு வசதியாக சமீபத்தில் வவுனியாவில் உள்ள கமர்ஷியல் வங்கியில் ஒரு கணக்கையும் தொடங்கியுள்ளோம். (கணக்கு எண்ணையும் சொல்கிறார்).
எங்களது இமெயில் முகவரி- ண்ய்ச்ர்ஃய்ங்ழ்க்ர்.ப்ந்/ஜ்ஜ்ஜ்.ய்ங்ழ்க்ர்.ப்ந்
மறு சீரமைப்பு, மறு கட்டுமான நடவடிக்கைகளில் உங்களுக்கு திருப்தி உள்ளதா?
நான் எதிர்பார்த்ததை விட இப்போது நிலைமை நன்றாகவே உள்ளது. மக்கள் நம்பிக்கையை கட்டமைப்பதில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றாலும் கூட, இந்த அரசு இதுவரை செய்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.
அரசையும், ஐ.நா. அமைப்புகளையும், என்ஜிஓக்களையும் தங்களது தேவைகளுக்காக தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை விரைவாக செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
சமீபத்தில் நான் வடக்குக்குச் சென்றிருந்தபோது, பல நூறு மாணவர்களுக்கு தேர்வு எழுதக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பரீட்சை எழுத முடியுமா என்ற சந்தேகத்தில் அவர்கள் இருந்தனர்.
ஆனால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் அது சாத்தியமாயிற்று. அதை அவர்களும் உணர்ந்துள்ளனர். எங்களுக்கு உதவ வாருங்கள் என்று தமிழ் மக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
சமீபத்தில் இரண்டு பள்ளிகளின் முதல்வர்கள் எங்களிடமிருந்து நிதியைப் பெற்று தமது பள்ளியின் ஏழை மாணவர்கள் தேர்வெழுதவும், கல்விக் கட்டணத்தை செலுத்தவும் உதவியுள்ளனர்.
இப்போது போர் முடிந்து விட்டது. எனவே வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். சமீபத்தில் கூட நாங்கள் வவுனியாவில் உள்ள சுந்தரலிங்கம் தமிழ் மகா வித்தியாலயாவுக்கு ரூ. 50,000 நிதியளித்தோம்.
அதிபர் ராஜபக்சே அரசுடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா?
பல்வேறு சமுதாய மக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை போக்கி, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிபர் ராஜபக்சே சீரிய வழியில் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே உள்ளன.
போர் முடிந்த ஒரு வருட காலத்திற்குள், போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையினோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். முன்னாள் போராளிகள் பலருக்கு மறு வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச சமுதாயமும் கூட இலங்கை அரசின் முயற்சிகளுக்கு பெரும் துணையாக உள்ளது.
இவையெல்லாம் அதிபர் ராஜபக்சேவின் திறமையான நிர்வாகத்தால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அவரது அரசியல் தலைமையால்தான் இதை சாதிக்க முடிந்துள்ளது.
எனவே நடப்பு நிலையை புலம் பெயர்ந்த தமிழர்கள் உணர முனவர வேண்டும். விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையை நிலையை அவர்கள் அனுமானிக்க வேண்டும். புதிய சவால்களை சந்திக்க அவர்கள் தயாராக வேண்டும்.
கடந்த காலத்தில் நடந்ததை நினைத்துக் கொண்டு இப்போதும் அதே நினைவிலேயே நாம் இருக்கக் கூடாது. மறுசீரமைப்பு நடவடிக்கைளில் அனைவரும் இணைந்து தோள் கொடுக்க வேண்டும்.
மீடியாக்களும் விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையந நிலையைப் புரிந்து கொண்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட முன்வர வேண்டும். எதிர்மறையாக எழுதுவதால் எந்தப் பயனும் எமது மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. எது பொருத்தமானதோ அதையே செய்ய வேண்டும்.
அமைதியை நிரந்தரப்படுத்துவதிலும், வளர்ச்சியிலும் மட்டுமே மீடியாக்கள் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
எப்போது முதன் முதலில் இலங்கையை விட்டு வெளியேறினீர்கள். அதன் பிறகு கடைசியாக இலங்கைக்கு எப்போது வந்தீர்கள்.?
1980ம் ஆண்டு பிரபாகரனுடன் நான் இந்தியாவுக்கு தப்பி ஓடினேன். என்னை ராணுவம் கைது செய்வதற்காக தேடியது. ராணுவத்தின் நடவடிக்கை தீவிரமாக இருந்ததால் நான் இலங்கை திரும்பவில்லை. அப்போது ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வந்த காரணத்தால், நாங்கள் ஒரு படகின் மூலம், வல்வெட்டித்துறையிலிருந்து இந்தியாவுக்கு சென்றோம்.
டியூஎல்எப் தலைவர் அமிர்தலிங்கம்தான் 70களில் என்னை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அது 1976 என்று நினைக்கிறேன். அப்போது டெலோ மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு அமைப்புகள்தான் பெரிதான அமைப்புகளாக இருந்தன.
நான் தெல்லிப்பழையில் உள்ள மகாஜனா கல்லூரியில் படித்தேன். பின்னர் எமது உரிமைகளுக்காகப் போராடுவதற்காக படிப்பை விட்டு விட்டேன். எங்களது உரிமைகளை தொடர்ந்து வந்த அரசுகள் புறக்கணித்ததாக நாங்கள் கருதியதால் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இன்று எங்கள் முன்பு வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிலும் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. இந்த அமைதி நிரந்தரமாக வேண்டும் என கருதுகிறோம்.
யாழ்ப்பாணம் மேயர் ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்ததற்குப் பின்னர் அமைப்பின் அரசியல், ராணுவ கொள்கையாளர்கள், பிரபாகரனை அமைப்பிலிருந்து நீக்கினர். அவர் என்னிடம் வந்தார். அப்போது நான் சாதாரண மாணவன்தான். எனது அறையில் நான் பிரபாகரனுக்கு இடம் கொடுத்தேன். அவரைக் கொல்ல பலரும் முயன்றனர். டெலோ தலைவர் தங்கதுரையும் ஒருவர்.
4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்களது தலைமை உங்களிடம் கூறியதா?
பிரபாகரன், அவரது முக்கியத் தளபதிகள், புலம் பெயர்ந்த தமிழர்களில் சில பிரிவினர், தமிழ்நாடு நமக்கு உதவும் என நம்பியிருந்தனர். தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கு உதவ முன்வரும், பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவார் என அவர்கள் பெரிதும் நம்பினர்.
நாங்களும் கூட சில ஐ.நா. அதிகாரிகளை அணுகினோம், கிழக்கு தைமூர் அதிபரை அணுகினோம். ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்பாட்டை ஏற்படுத்த முயன்றோம். இந்த நேரத்தில்தான் 2009ம் ஆண்டு மே மாதம் 3வது வாரத்தில் விடுதலைப் புலிகள் வசம் இருந்த கடைசிப் பகுதியையும் ராணுவம் சுற்றி வளைத்து விட்டது.
தற்போது விடுதைலப் புலிகளின் ராணுவ கட்டமைப்பு இல்லை. இந்த நிலையில், அரசுடன் இணைந்து செயல்பட புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வருவார்கள் என கருதுகிறீர்களா?
புலம் பெயர்ந்த மக்களின் மன நிலையில் மாற்றம் வர வேண்டியது அவசியம். விடுதலைப் புலிகளின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்து போய் விட்டது. எனவே புதிய சூழ்நிலை குறித்து பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். தற்போதைய நிலையை புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் சிந்தித்துப் பார்க்க முன்வர வேண்டும். அதற்கேற்ப அவர்கள் செயல்பட வேண்டும்.
முடிந்து போன போராளி இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும். எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம்.
இப்போது ராணுவரீதியான பலம் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பதால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இந்த இடத்தில்தான் நாங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புகிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு திரும்புவது தொடர்பான பணிகளில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள வடக்கு கிழக்கு மறு சீரமைப்பு வளர்ச்சிக் கழகம் தயாராக உள்ளது. இந்த வாய்ப்பை புலம் பெயர்ந்த தமிழர்கள் விட்டு விடக் கூடாது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமாக நடமாட முடியும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.
வெளிநாடுளிலிருந்து ஆயுதங்களைப் பெற்று அனுப்புவதில் நீங்கள் மிகவும் வெற்றிகரமானவர் என்று அறியப்பட்டவர் நீங்கள். அப்படி இருக்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவரை உங்களது இடத்தில் அமர்த்தினார் பிரபாகரன். எப்போது அதைச் செய்தார், ஏன் செய்தார்?
2003ம் ஆண்டு நான் நீக்கப்பட்டேன். வெளிநாட்டுக் கட்டமைப்பை காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். உளவுப் பிரிவினரின் தொடர் கண்காணிப்பு காரணமாக நான் மிகவும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். (இலங்கை உளவுப் பிரிவினரின் திறமை காரணமாகத்தான் வெளிநாடுளில் புலிகள் அமைப்பின் செயல்பாடுகள் முழுமையாக செயலிழந்து போனதாக கூறியுள்ளாராம் கேபி)
உங்களது ஆதரவாளரான ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றது ஏன்?
அப்போதைய பிரதமர் உறுதியானவராக இல்லை என்று பிரபாகரன் கருதினார். ஈழப் பிரச்சனையை ரணில் விக்கிரமசிங்கேவால் தீர்த்து வைக்க முடியாது என்பது அவரது எண்ணம். இதன் விளைவாக மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற முடிந்தது. ராஜபக்சேவுக்கு முன்பு இருந்த தலைவர்களை எளிதில் வென்ற பிரபாகரனுக்கு ராஜபக்சேவை வெல்ல முடியவில்லை.
2006 ஆகஸ்ட் மாதம் மீண்டும் சண்டைகளில் ஈடுபடுவதற்கு முன்பு உங்களிடம் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆலோசனை நடத்தியதா?
பாதுகாப்பு படையினர் மீது மிகப் பெரிய தாக்குதலை தொடுப்பதற்கு முன் என்னுடன் பிரபாகரன் ஆலோசனை நடத்தினார். உடனடியாக பெருமளவிலான ஆயுதங்களை வாங்கி அனுப்புமாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.மேலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அதேசமயம், ராணுவரீதியாக ஈழத்தை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் பிரபாகரன் உறுதியாக இருந்தவரை அவர் யாருடைய ஆலோசனையையும் கேட்கத் தயாராக இல்லை.
நீங்கள் தற்போது கொழும்பில் இருப்பதால், உங்களுக்கும் அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்படும், அதனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என சில தமிழ் அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். அப்படி ஏதேனும் உள்ளதா?
நான் கொழும்பில் இருப்பதால் யாரும் பயப்படத் தேவையில்லை. தற்போதைய தேவை போருக்குப் பிந்தைய பிரச்சனைகளைத் தீர்க்கத் தேவையான அரசியல் அணுகுமுறை மட்டுமே. போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவவும், வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் தேவையான ஒருங்கிணைந்த திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். இதைத் எந்த அரசியல் தலைவருடனும், கட்சியுடனும் மோதும் எண்ணம் எனக்கு இல்லை.
தமிழ் சமுதாயத்தின் நன்மைக்காக, புலம் பெயர்ந்த தமிழ் சமூகமும், அரசியல் கட்சிகளும், பிரிவுகளும், இலங்கையில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும். மற்றபடி எனக்கு வேறு எந்த அரசியல் அபிலாஷைகளும் இல்லை.
இலங்கை அரசை தவிர்த்து விட்டு எதையும் செய்யலாம் என்று நான் நினைக்கவில்லை. அதுசாத்தியமில்லை. பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
புலிகளுக்கு உங்களது நிதி சேகரிப்பு எப்படி இருந்தது?
மிகப் பெரிய அளவில் அப்போது எங்களுக்கு நிதி சேர்ந்தது. நிதிக்குப் பஞ்சமே இல்லை என்று கூறும் அளவுக்கு வந்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் பணம் வந்தது. சுனாமியின்போதும் கூட எங்களுக்கு பெருமளவில் பணம் வந்தது. இருப்பினும் அதுகுறித்து என்னால் விரிவாகச் சொல்ல முடியாது. காரணம், அவற்றையெல்லாம் அப்போது பராமரித்தது காஸ்ட்ரோதான். அவர் ஒருபோதும் என்னுடன் ஒத்து வந்ததே இல்லை.
பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், இந்த நிதி குறித்து புலம் பெயர் தமிழ்ச் சமுதாயத்தினர் விவாதித்தனர். அவர்களில் சிலர் வசம் நிதிப் பொறுப்பு இருந்தது. அவர்கள் உடன்பட்டு வர மறுத்து விட்டனர். இதனால்தான் பெரும் பிளவு ஏற்பட வாய்ப்பானது.
பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவை எப்போது சந்தித்தீர்கள்?
நான் பிடிபட்டு கட்டுநாயகே விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, மிகவும் மனம் உடைந்திருந்தேன். மிகவும் பதட்டத்துடன் இருந்தேன். எனது முடிவு நெருங்கி விட்டதாக கருதினேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியும், என்னை அவர்கள் கைது செய்ததும் எனது இதயத்தை நொறுங்கச் செய்தது.
கட்டுநாயகே விமான நிலையத்திலிருந்து நேராக என்னை கோத்தபயா வீட்டுக்குக் கொண்டு சென்றனர். மிகச் சிறந்த நிர்வாகியாக, திறமையாளராக அறியப்பட்ட கோத்தபயா ராஜபக்சேவை அப்போது எனக்கு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்த அடுத்த சில நிமிடங்களிலேயே எனது அனைத்துப் பயத்தையும் அவர் போக்கி விட்டார். எனக்கு டீ, கேக் தரப்பட்டது. பின்னர் அங்கிருந்து நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.
கோத்தபயா வீட்டுக்குள் நான் நுழைந்ததும் அங்கு ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்தது. இங்கு எனக்கு எதுவும் நடக்காது என்ற தைரியம் கிடைத்தது.
பின்னர் கோத்தபயாவின் ஆசிர்வாதங்களுடன், கனடா, இங்கிலாந்து , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா , ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து 9 தமிழர்களை நான் கொழும்புக்கு அழைத்து வந்து அவரை சந்திக்க வைத்தேன். மறு வாழ்வு நடவடிக்கைகளில் அவர்களது உதவியைப் பெறுவது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது.
புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான விரிசலை குறைக்க நிறைய செய்ய வேண்டியுள்ளது. இதற்காக நான் பல நாட்கள் இரவு கூட தூங்காமல் விழித்திருந்து பாடுபட்டேன். எங்களது நடவடிக்கையை சிலர் எதிர்க்கிறார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை, அதன் ராணுவ பலம் இல்லை என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட முன்வர வேண்டும்.
அரசின் அனுமதியோடு நாங்கள் படைத் தலைவர்கள் சிலரையும் சந்திக்க முடிந்தது. ராணுவம் எங்களை இதமாக, அன்பாக வரவேற்கும் என நான் கருதவே இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. குறிப்பாக பலாலியில் அப்படி ஒரு வரவேற்பு எங்களுக்குக் கிடைக்கும் என கருதவில்லை. ஆனால் அவர்கள் என்னை அன்போடு வரவேற்றுப் பேசினர்.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.