Top

வானில் பறக்கும் புலம் பெயர் தமிழரும் பறந்து போன கடந்த காலமும்

March 19, 2010

கோடை விடுமுறைக்கு யாழ். பயணங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன..
எயார் லங்கா விமானங்கள் புலம் பெயர் தமிழரால் நிறைந்து வழிகிறது..
சாட்டட் விமானத்தில் பயணிக்கப் போகிறார்கள் மேலும் பலர்..

வரும் கோடை விடுமுறைக்கு சிறீலங்காவிற்கு பயணிப்பதற்கு பெருந்தொகையான தமிழர்கள் தயாராகிவிட்டார்கள். ஏயார்லங்கா உட்பட சகல விமானங்களும் ஆசனங்கள் இன்றி நிறைந்து வழிகின்றன. இதுவரை தமிழ்நாடு சென்னைக்கு நிறைந்த உல்லாசப்பயணங்கள் மறுபடியும் இலங்கை நோக்கி திரும்புகின்றன. இந்தச் செய்திகளை அடிப்படையாக வைத்து சமூக ஆர்வலர் மு.இராஜலிங்கம் எழுதியுள்ள ஆதங்கம் நிறைந்த கட்டுரை.

தழிழர்களாகிய நாம் கடந்தகாலப் புகழ்ப்பேச்சும் எதிர்காலச் செயற்பாடுமற்று புத்திசாலித்தமிழரென மனதிற்குள் மகிழ்ந்து எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தது எத்தனையோ ………….

புரிதலற்ற கோட்பாடுகளாலும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளாலும் விட்டுக்கொடுப்பற்ற சிந்தனைகளாலும் இழந்தவைகள்தான் ஏராளம்………..

கடந்த கால படிப்பினைகள் கசப்புகள் உளவியல் சார்ந்த பாதிப்புகள் சொந்தங்கள்சொத்துச் சுக இழப்புகள் பட்ட வேதனைகளாகவே தொடர……..

இயற்கை தந்த துயர் சுனாமி தந்தவடுக்கள் …..செயற்கை தந்து சென்ற (2009) சென்றவருட வடுக்கள் இவையனைத்தையும் உள்வாங்கிய பின்னரும் சிந்திக்கத் திறனற்ற ஓர் சமுகமாக மேய்ப்பன் அற்ற மந்தைகளாக மனம்போன போக்கில் நாம்……….

எதிர்வரும்கோடைகாலத்திற்காகஇலங்கையைநோக்கிகோடைவிடுமுறையைக்கெண்டாடஉலகத்தின் முலை முடுக்கெங்கும் வதியும் தமிழர்கள் போட்டி….

எம்தமிழர்களுக்காக விமானநிறுவனங்கள் விசேட நேரடி விமானசேவைகளை ஒழுங்கு செய்கின்றன இலங்கையரசோ ஒருபடி மேலாக வடபகுதிக்கான விமான நிலையங்களை அதிவேகமாக புனரமைத்து உள்ளுர் விமான சேவைகளைத் தரமாக்கி வீடுகள் வரை தரமானசேவையை வழங்க முயல்கின்றது. அதைவிட பல இராணுவ முகாங்களைக்கடந்து போக வேண்டிய ஏ 9 பாதையை எந்தவொரு இடைமறிப்புமில்லாமல் கட்டுநாயக்காவிலிருந்து கெடுபிடிகளின்றியும் ஆட்கடத்தல் வெள்ளைவான் கடத்தலின்றி சுலபமாகசெல்லக் கூடியவாறு மாற்றியமைத்திருக்கின்றது. இவையாவும் ஏன் எனச் சிறிது சிந்திக்கின்றோமா……

இப்போது அங்கு சென்றுவருபவர்களையும் இலவசமாக விளம்பரம் செய்யுமளவிற்கு இலகுவான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றது. அங்கு சென்று வருபவர்கள் வெளிநாடுகளைப்போன்று இடையூறில்லாமல் என்று கூறுகின்றளவிற்கு திட்டமிட்டு செயற்படுகின்றமையை ஏன் நாம் புரிந்துகொள்ளவில்லை……….

3 லட்சம் மக்கள் திறந்தவெளிச்சிறை போல கம்பி வேலிக்குள் வைத்துக்கொண்டிருக்கும்போது அவர்களைத் தங்களது சொந்த இடங்களிலே மீளக்குடியமர்த்த முடியாமல் தடைப்பிரதேசமாக பாதுகாப்பு வலயங்களாக இராணுவ ஊர்களைத் திறந்து அதற்குள் மக்களை இராணுவத்திறந்த வெளிச் சிறைபோல வைத்திருக்கும் நிலையிலும் எவ்வளவோ மானிடவியல் அடிப்படைத் தேவைகள் இருந்தும்கூட அவற்றைத் தொட்டுக்கூடப் பார்க்காமலேயே இலங்கை முழுவதையும் இராணுவ ஆழுமைக்குள் வைத்துக்கொண்டு தமிழர்கள் தீர்வுபற்றி சிறிதேனும் சிந்திக்காது உல்லாசப்பயணத் துறையை ஊக்குவிப்பது ஏன்……சிந்திக்கத் தூண்ட வில்லையா…. அல்லது சிந்திக்க மறுக்கிறோமா…..

2009 ஜனவரி தொடங்கி 2009 மே முடியும் வரை உலகின் முலை முடுக்கெங்கும் வாழும் தமிழ் மக்கள் வெகுண்டெழுந்து வீதியில் இறங்கி தங்கள் சொந்த நாட்டிற்காகவும் சொந்த உறவுகளிற்காகவும் கதறியதை மறந்து விட்டோமா……..

உலக நாடுகளின் கவனம் எம் மீதும் எமக்குச்சார்பாகவும் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையிலே உதாரணமாக ஐ.நா சபை முன்னெடுக்கும் தீர்மானம், சனல் – 4 தொலைக்காட்சியின் மனித உரிமை விடயம் ஐரோப்பிய வரிச்சலுகைத் தடை, டப்ளின் நீதிமன்றத்தீர்ப்பு, இதுபோன்ற உலக நாடுகளின் பல செயற்பாட்டுத் திட்டங்களை வலுவிழக்கச் செய்யுமென தனித்தனியாக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோமென்பதை உணரவில்லையா அல்லது உணர்ந்தும் உதாசீனப்படுத்தும் தன்மையா……..

புலம்பெயர்ந்து வரும் அகதிகளை புறக்கணித்த உலக நாடுகள் புதுமாத்தளன் துன்பத்திற்குப்பின் திறந்த வெளிச்சிறை நிலை கடந்து தப்பிப்பிழைத்து வரும் பொது மக்கள் போராளிகள் மீது நல்லதொரு வாழ்வியலை வழங்கும் மனநிலையை மாற்றிவிடும் களமாக இலங்கைப்பயணம் வழியமைக்குமென்பதை அறியாதவர்களாகவா நாமிருக்கின்றோம்.

ஈராக் மக்களில் அகதி நிலையில் இருந்தவர்கள் ஈராக்கிற்குச் சுற்றுலாசென்று திரும்பிய காரணத்தால் விசேடசட்டமுலம் கொண்டுவந்து அகதியனுமதி வழங்காதவர்களை திருப்பியனுப்ப நேர்ந்ததைப்போல ஆப்கானியர் தங்கள் நாட்டிற்குச் சென்றதனால் திருப்பியனுப்பப்பட்டதைப் போல எமக்கு நாமே குழி தோண்டிக் கொள்கின்றோமல்லவா…

நல்லதொரு மனிதாபிமானச் செயற்பாடு கொண்ட உலக நாடுகளை இறுக்கமான கட்டுப்பாடுகளை செயற்படுத்தி திறந்த வெளிச்சிறை அகதிநிலை கடந்து தப்பிப்பிழைத்து வரும் பொதுமக்கள் போராளிகளின் நல்லதொரு வாழ்வியலைக் குழப்பும் போக்கிற்கான காரணிகளாக இலங்கைக்கு இப்போது செல்வது அமையுமல்லவா…

இலங்கையின் எந்தவொரு பகுதிக்கும் மக்கள் சுதந்திரமாக செல்கின்றார்கள் என்றும் அதுவும் குறிப்பாக வடபகுதிக்கு உலகத்தமிழர்கள் சுதந்திரமாக போய் வருவதை உலகத்திற்கு உரக்கச் சொல்லுமொரு வாய்ப்பை நாமாகவே இலங்கையரசிற்கு ஏற்படுத்திக் கொடுப்பதாகவே அமைவதை நாங்கள் உணராமலேயே எங்களை நாங்களே பலியாக்கிக் கொள்கின்றோமல்லவா…

சொந்த நாடுகூட இல்லாமல் ஐரோப்பா முழுவதுவும் பரந்து வாழ்ந்த யூத இனமக்கள் உலக யுத்தங்களின் போது தேடிப்பிடித்து வதை முகாம்களிலும் சிதைகளிலும் போட்டுக் கொன்றொழித்த போதும் அரை நூற்றாண்டிற்குள் தங்களுக்கான தேசத்தைக் கட்டியமைத்து விவசாயத்தினில் தன்னிறைவும் உலக வல்லரசளவிற்கு உயரவைத்ததும் அவர்களுடைய ஒற்றுமையுணர்வுதான்.

அமெரிக்காவின் காலடியின் கீழ் சின்னம் சிறிய குட்டித்தீவான கியூபா போராடி தனது தேசத்தைக் கட்டியமைத்து உலகத்திலேயே மருத்துவத்துறையிலே முன்னோடியாகவும் உணவுற்பத்தியிலே தன்னிறைவில் வெற்றி கண்டதும் அவர்களுடைய ஒற்றுமையுணர்வுதான்

இரண்டாம்உலக யுத்தத்தின் போது இரண்டு அணு குண்டுகளின் தாக்கத்தினாலும் அடிக்கடி சுனாமி பூகம்பம் எரிமலை தாக்கத்தினாலும் பாதிக்கப்படும் யப்பான்தேசம் இன்று உலகம் முழுவதுவும் தனது வாகனங்களாலும் இலத்திரனியல் பொருட்களாலும் வியாபித்திருப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய ஒற்றுமையுணர்வுதான்

மோட்டுச் சிங்களம் புத்திசாலித் தமிழரென மனதிற்குள் மகிழ்ந்து எதிர்பார்த்துபார்த்து ஏமாந்தவைகளனைத்தையும் நினைவிற்கொண்டு புரிதலற்ற கோட்பாடுகளாலும் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளாலும் விட்டுக்கொடுப்பற்ற சிந்தனைகளாலும் கடந்த காலம் தந்த படிப்பினைகள் கசப்புகள் உளவியல் சார்ந்த பாதிப்புகள் சொந்தங்கள் சொத்துச்சுக இழப்புகள் பட்ட வேதனைகளை உணர்ந்து அவற்றைப் படிக்கற்களாக்கி ஒற்றுமையுணர்வுடன் காரியமாற்றவேண்டிய காலமிதுவென்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவில்லையெனில் இதுவரை கண்ட துன்பங்களைச்சிறிதாக்கி இதைவிடப் பெருந்துன்பங்கள் எமைச் சூழ நாங்களே காரணிகளாவோம். ஓற்றுமையுடன் அனைவரும் சிந்திப்போமா…?

மு. இராஜலிங்கம்

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom