சரத் பொன்சேகாவின் கைது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் அமெரிக்கா எச்சரிக்கை
February 9, 2010

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது, இலங்கையில் யுத்த மீட்சிக்கு பின்னர் பாரிய பிளவுகளுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக கருத்துரைத்துள்ள, அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் பிலிப் கிரௌலி, அமெரிக்கா நிலைமையை அவதானித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம், சமூகத்தில் ஏற்படும் அமைதியின்மையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுள்ளார். சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை, இலங்கையின் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இலங்கை அரசாங்கம், ஜனநாயக விழுமியங்களுக்கு இடம்கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ள அவர், தேர்தலின் போது இந்த கைது நடவடிக்கை தேவையற்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா, அமெரிக்க கிரீன் காட் வதிவிட அனுமதியை கொண்டுள்ள நிலையில் இந்த கருத்தை அமெரிக்கா வெளியிட்டிருப்பது இலங்கையின் அரசியல் மட்டத்தில் விமர்சனங்களை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.




Comments
Got something to say?
You must be logged in to post a comment.