வி்டுதலை வேண்டி அ’புரம் சிறைச்சாலை தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதம்
September 28, 2009

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, திங்கட்கிழமை நண்பகல் முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு அரசியல் கைதிகள் கொண்டு வந்துள்ளனர்.
இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் வரையில் எந்தவிதமான வழக்கு விசாரணைகளுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகின்ற இவ்வேளையில், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் இவர்கள் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
தண்ணீர் மாத்திரம் அருந்தி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள இவர்கள் நீதி அமைச்சின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நேரில் வந்து தங்களிடம் உறுதிமொழி வழங்கும் வரையில் தமது உண்ணாவிரதம் தொடரும் எனத் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் தலைவர்களாக இருக்கின்றார்கள். பல முன்னணி தலைவர்கள் இன்று அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளனர்.
அவர்களில் சிலர் விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தங்களைத் தடுத்து வைத்திருப்பது குறித்து அவர்கள் பெரிதும் விசனம் தெரிவித்திருப்பதாகவும் ஆனந்தன் தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் 43 பேருக்கு ஆதரவாக மகசின், பூஸா, வெலிக்கடை உட்பட ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது




Comments
Got something to say?
You must be logged in to post a comment.