செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை!

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்த பதில், அர்த்தத்தை சிதைக்கும் விதத்தில் பல ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியுள்ளன.

எனினும், 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு நேற்று பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், மாகாண சபைகளில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை (DDC) ஸ்தாபிக்கத் தயார் எனத் தெரிவித்தார்.

அதுதவிர மாகாண சபைகள் கலைப்பு தொடர்பில் ஜனாதிபதி எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

நிறைவேற்றுத் தீர்மானங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கான களமாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் செயற்படும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நிலைப்பாடாகும்.

அதன் மூலம், வளர்ச்சிப் பணிகள் முறையாக நடைபெறுவதுடன், நிதி வீண்விரயம் மற்றும் தாமதங்கள் தவிர்க்கப்படும்.

Related posts