சீன உளவு கப்பல் வருகை !

சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது.
இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு செய்தனர்.
இந்த நிலையில் உயர்தொழில்நுட்ப சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கையில் இருப்பதால் எழக்கூடிய எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா நன்கு தயாராக உள்ளதாக மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் “பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் எந்த வகையான சூழ்நிலையையும் திறம்பட கையாள்வதற்கு நாங்கள் நன்கு தயாராக உள்ளோம்.
அதுபற்றி தெளிவாக இருக்கிறோம்” என தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பேசிய மத்திய மந்திரி, பாரதீப், விசாகப்பட்டினம் மற்றும் சென்னை துறைமுகத்தில் ஏற்கனவே உள்கட்டமைப்பை மேம்படுத்தத் தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.

Related posts