தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்காதது ஏன்?

“அனைவரும் நினைத்து பார்க்காத கதாபாத்திரத்தில் நடிப்பதை நான் விரும்புகிறேன். விரைவில் தமிழ் படங்களில் நடிப்பேன்” என்றார் பிருத்விராஜ். மலையாள பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், தமிழிலும் ‘கனா கண்டேன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘பாரிஜாதம்’, ‘மொழி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட பிருத்விராஜ், நடிப்பில் ‘கடுவா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.

தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்காதது ஏன்? என்பதற்கான விளக்கத்தை பிருத்விராஜ் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- “தமிழில் நான் நடித்த சில படங்கள் இனிமையான நினைவுகள்.

‘மொழி’ மாதிரியான ஒரு நல்ல படத்தை தமிழ் சினிமா எனக்கு வழங்கியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ‘காவியத்தலைவன்’ படத்துக்கு பிறகு எனக்கு சரியான வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை.

என்னை சிலிர்க்க வைக்கிற அல்லது நான் இதுவரை செய்யாத கதாபாத்திரங்கள் எனக்கு அமையவில்லை. நான் இப்படித்தான் நடிப்பேன் என்று ரசிகர்கள் முடிவு செய்து விடக்கூடாது.

யாருமே நினைத்துப் பார்க்காத கதாபாத்திரத்தில் நடிப்பதையே நான் விரும்புகிறேன். இது மாதிரியான கதாபாத்திரங்களை சில இயக்குனர்களிடம் வற்புறுத்தி கேட்டிருக்கிறேன். விரைவில் தமிழ் படங்களில் நடிப்பேன்” என்றார்.

Related posts