மீனாவின் கணவர் இறந்தார் இறுதி அஞ்சலி!

நடிகை மீனாவின் திருமணம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. இவர் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இவர்களுக்கு நைனிகா என்கிற பெண் குழந்தையும் பிறந்தது. திருமணம் முடிந்து ஓரிரு ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த மீனா, பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் என்கிற மலையாள படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனா. இப்படம் ஹிட் ஆனதும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அவரை அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஊந்துகோளாக இருந்தது மீனாவின் கணவர் வித்யாசாகர் தான்.

இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனாவுக்குப் பின் அது தீவிரமடைந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் திடீரென அவருக்கு நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து உள்ளது. அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போய் உள்ளது. மாற்று நுரையீரலுக்காக சென்னை உட்படபல இடங்களில் மூளைச்சாவு அடைந்தவர்கள் உறுப்புகள் கிடைக்கிறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார். மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

திரையுலகினர் பலரும் தங்கள் ஆறுதலை மீனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சரத்குமார் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திரைப்பட நடிகையும், என் குடும்ப நண்பருமான நடிகை மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் இறந்ததை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனா, நைனிகாவும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்” என கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என் அன்புக்குரிய தோழி மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்துபோன தகவலோடு எழுந்திருக்கிறேன். நீண்டகாலமாக நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் இப்போது உயிரோடு எங்களுடன் இல்லை என்பது பயங்கரமாக இருக்கிறது. மீனாவுக்கும், அவரது மகள் நைனிகாவுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, மீனாவின் குடும்பத்தின் துயரச் செய்தியோடு இன்று காலை விடிந்தது. அவர்களது குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த்,டைரகடர் கே.எஸ்.ரவிக்குமார்,நடிகர் ரகுமா, பாடகர் கிரிஷ், நடிகைகுஷ்பு,நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் நாசர், நடிகர் சரத்குமார், டான்ஸ் மாஸ்டர் கலா, காயத்ரி ரகுராம், அமைச்சர் மா.சுப்ரமணியன், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி ஊர்வலம் சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கியது.இறுதி ஊர்வலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று உள்ளனர்.பெசன்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

Related posts