கேரள நடிகை சகானா மர்ம சாவில் திருப்பம் கணவர் கைது

கேரளாவில் நடிகை மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் அவரது கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சகானா (வயது 20). மாடல் அழகியான இவர், ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சகானாவுக்கும், சஜ்ஜாத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கோழிக்கோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணியளவில் சகானாவின் கணவர் சஜ்ஜாத்தின் அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர். அப்போது சஜ்ஜாத்தின் மடியில் சகானா இறந்த நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ஜன்னல் கம்பியில் தூக்குப் போட்டு சகானா தற்கொலை செய்து கொண்டதாக கூறியபடி சஜ்ஜாத் கதறி அழுதார்.

சாவில் சந்தேகம்

பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அங்கு வந்த சகானாவின் உறவினர்கள், சகானாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என போலீசில் புகார் அளித்தனர்.

கணவர் கைது

இந்த நிலையில் சகானாவின் கணவர் சஜ்ஜாத்தை ேபாலீசார் கைது செய்தனர். அவரிடம் நடிக்கையின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகை சகானா மர்ம மரணம் குறித்து சகானா கதாநாயகியாக நடித்த லாக்டவுன் என்ற தமிழ் படத்தின் இயக்குனர் ஜோளி பாஸ்டியன் கூறியதாவது:-

சினிமா செட்டில் வைத்து சகானாவுக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. ஏதோ ஒரு வகை மன உளச்சலில் இருந்ததை புரிந்து கொண்டேன். சகானாவை வைத்து மற்றொரு படம் இயக்க திட்டமிட்டு இருந்த நேரத்தில் அவரது மரண செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts