தங்க மங்கைக்கான கௌரவிப்பு நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இந்த யுவதிக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கரிப்பட்ட முறிப்பு புதியநகர் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த யுவதியினை கௌரவிக்கும் நோக்கில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றினை ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.

அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு புதிய நகர் புதிய சூரியன் விளையாட்டு மைதானத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் புதிய சூரியன் விளையாட்டு கழகம் என்பன இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் நா.குகேந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

தங்கம் வென்ற யுவதியின் வீட்டில் இருந்து உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானம் வரை யுவதி மற்றும் அவருடைய தாயார், அம்மம்மா, அம்மப்பா மற்றும் விருந்தினர்கள் கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்ளின் பான்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையையுடன் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து தனது திறமையினை வெளிக்காட்டிய மாணவிக்கு பலர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளதுடன் விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

கடந்த 18 ம் திகதி பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற இரண்டாவது பாகிஸ்தான் சிறீலங்கா சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணிசார்பில் பங்கேற்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி என்ற யுவதி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட 50-55 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts