விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்துக்கு ‘ரத்தம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
தமிழின் முதல் ஸ்பூஃப் திரைப்படமாக ‘தமிழ்ப் படம்’ கொடுத்த இயக்குநர் சி.எஸ்.அமுதன், அடுத்து ‘ரெண்டாவது படம்’ இயக்கினார். இன்னும் இப்படம் வெளியாகவில்லை. தொடர்ந்து ‘தமிழ்ப் படம் 2’வை இயக்கினார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது.
தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் சி.எஸ்.அமுதன். இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போரா, விக்ரம் குமார் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘ரத்தம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, ‘தமிழ்ப்படம்’ மற்றும் ‘தமிழ்ப்படம் 2’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த கண்ணன் இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.
‘ரத்தம்’ படத்தின் 40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்ட நிலையில் மீதியிருக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. 2022 கோடைக்கால வெளியீடாக இப்படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts