பொங்கல் பரிசு வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல்

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தி தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகைப் பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சுமார் ரூ.1,297 கோடி செலவில் 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 21 மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பல ரேஷன் கடைகளில் குறைந்த அளவிலான பொருட்களே வழங்கப்பட்டது.
மேலும், தரம் குறைந்த மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்லி மற்றும் ஊசி போன்ற அபாயகரமான பொருட்கள் இருந்தது குறித்தும், பல பாக்கெட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது குறித்தும் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. கரும்பு கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை, விவசாயிகளுக்கு முழுமையாக கொடுக்காமல், 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கவும் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related posts