உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 22. 03

உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 22. 03
தேவனுக்கு நிகரானவர் (ஒப்பானவர்) யார்?
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

இன்று மிகஉன்னதமான ஓர் வேதவார்த்தை ஊடாக தேவனிடத்தில் இருந்து ஆசீர்வாதத்தையும், ஆறதலையும், அமைதியையும் கண்டுகொள்ளும் வண்ணமாக அலைகள் வாசக நேயர்களாகிய உங்கள் அனைவரையும் அழைத்துச்செல்கிறேன்.

தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர், தேவனே, உமக்கு நிகரானவர் யார்? சங்கீதம் 71.19

இந்த வேதப்பகுதியை எழுதிய தேவ மனிதன், தேவனின் கிரியைகளையும், அவரின் செயல்களையும் பார்த்து மேற்கண்டவாறு சொல்கிறான். தேவனின் கிரியைகள் எப்போதும் பெரிதானவைகள் என்பதை அவர் தன்வாழ்க்கையில் கண்டுகொண்டார். அதனால் அவர் உமக்கு நிகரானவர் யார் என்று அறிக்கை பண்ணுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. தேவனுடைய நீதி உன்னதமானது. அதனால் அவர் உலகத்தில் பெரிதானவைகளைச் செய்து நிகரற்ற தெய்வமாக விளங்குகிறார்.

இதை இன்னும் நாம் விளங்கிக்கொள்ள ஏசாயாவின் புத்தகத்தில் உள்ள ஓர் பகுதியை வாசிப்போம். ஏசாயா 55:9. ப10மியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந் திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என்நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. இந்த உண்மையை நாம் அறிய வேண்டுமாகில் தேவனுக்குப் பயப்படுகிற பயம் நமக்குள் முதலில் வரவேண்டும். அப்பொழுதுதான் நாம் வேதத்தில் உள்ள அதிசயங்களை, அற்புதங்களை நமது வாழ்க்கையில் காணவும், அடைந்து கொள்ளவும் முடியும்.

இதையும் வேதம் மிகத்தெளிவாக நமக்கு எடுத்துக் காட்டுகிறது. சங்கீதம் 103:11 ப10மிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிற வர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. நமக்கு, தேவனின் கிருபை பெரிதாக இருக்க வேண்டும் என்றால், நாம் முதலில் தேவனுக்குப் பயப்படுகிற பயத்தை எமது உள்ளத்தில் வெளிக்காட்ட வேண்டும்.

எப்படி நாம் தேவனுக்குப் பயப்படுகிற பயத்தை வெளிக்காட்டுவது? இது இன்று மக்களால் புரிய முடியாமல் உள்ள ஓர் புதிராகும். பிதாவாகிய தேவன் இவ்வுலக மக்கள்மேல் கொண்ட அன்பை, இயேசு கிறிஸ்து தமது சிலுவை மரணத்தின் தியாக மூலமாக இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்தினார்.

இதனை ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 53 ம் அதிகாரத்தில் நாம் காணலாம். (முழுவதையும் வாசிக்கவும்). வச.12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்தி லூற்றி அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தை தாமே சுமந்து அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிநிமித்தம்.

இந்த உண்மையின் நிமித்தமாக நாம் அவரின் அன்பையும், தியாகத்தையும் நினைத்து நன்றியுடன் வாழ்வது தான் அவருக்குப் பயப்படுதலின் வெளிப்பாடு. பாவங்கள் சாபங்களில் இருந்து விடுதலையையும், ஆறுதலையும், அமைதியையும் அவரின் சிலுவை மரணம் நமக்கு தருகிறது. அவர் நமது வாழ்க்கையில் செய்த அற்புதத்தை நினைத்து வாழ்வது. அவர் நமது வாழ்க்கையில் செய்த வல்லமையான காரியங்களை நினைத்த வாழ்வது.

இவ்வாறான தன்மைகளை உணரும் வாழ்க்கை வாழ்வதற்கு முதலில் நாம் அவரின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து, கீழ்ப்படிந்து வாழ முன்வர வேண்டும். இதனை யாத்திராகமம் 20:6 இவ்வாறு வெளிப்படுத்துகிறது. என்னிடத்தில் அன்பு கூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறவராயிருக்கிறேன். இதை இன்னும் நாம் விளங்கிக் கொள்ள ஏசாயா 1:19 வாசிப்போம். நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். நாம் யோவான் 14:23க் கவனித்தால் இன்னும் அதிகமாக இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என்பிதா அன்பாயிருப்பார்@ நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

இப்போது உணர்ந்திருப்பீர்கள் தேவனின் உன்னதமான நீதியையும், பெரிதான செயல்களையும். எந்தவொரு தெய்வத்தாலும் கொடுக்கமுடியாத பாவமன்னிப்பையும் பரலோக வாழ்க்கையாகிய நித்தியஜீவனையும் சிலுவை மரணத்தின் மூலம் இவ்வுலகத்திற்கு மகத்தான விடுதலையை அளித்த தெய்வத்தின் தன்மைகளை. இந்த தெய்வம், உனக்கும் நிகரான – ஒப்பான தெய்வமாக இருக்க விரும்புகிறார். அதற்கு நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்று. தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்க உன்னை முழுமனதோடு ஒப்புக்கொடுப்பதுதான். அப்போது இந்த நிகரற்ற தேவன் உன்னைத் தேடிவந்து உன்னோடு வாசம் பண்ணுவார். இந்த நிகரற்ற தேவன் உன்னிடத்தில் வாசம் பண்ணும்படியாக நாம் ஒரு மனதோடு ஜெபிப்போம்.

அன்பின் பரலோக பிதாவே, இந்த வேளையில் என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை உம்மிடத்தில் ஏறெடுக்கும் ஒவ்வொருவருக்காகவும் உம்மிடத்தில் வருகிறேன் அப்பா. இன்று நீர் எனக்கு, உமக்கு நிகரான தேவன் ஒருவரும் இல்லை என்பதை அறிந்து கொள்ள உதவினீரே, அதற்கு நன்றி அப்பா. உம்முடைய மகா உன்னதமான நீதியையும், மகாபெரிதான கிரியைகளையும், உம்முடைய நிகரற்ற சிலுவை மரணத்தின்மூலம் நாம் அடைந்த விடுதலையையும் நினைத்து உமக்கு நன்றி செலுத்துகிறேன் அப்பா. உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, பாவமன்னிப்பைப் பெற்று உமக்குள் விடுதலையான வாழ்வு வாழ உதவி செய்யும் நல்லபிதாவே, ஆமேன்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Pray for Denmark.

Related posts