சென்னையை அதிரவைக்கும் கொரோனா

இந்தியாவில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக காணப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மிதமான பாதிப்புகளையே இந்த வகை கொரோனா பெரும்பாலும் ஏற்படுத்தினாலும் அதன் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது.

இதனால், ஐரோப்பிய நாடுகளை கலங்கடித்த ஒமைக்ரான் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. 2-வது அலை பரவலில் இருந்த மீண்டு வந்த இந்தியாவில் 3-வது அலையாக ஒமைக்ரான் கொரோனா பரவத்தொடங்கியது. இந்த வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களிலும் தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்காத வண்ணம் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து வருகின்றன. என்னதான் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் மக்கள் அடர்த்தி கொண்ட பெருநகரங்களில் தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 8,963- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா பரவிய கடந்த 2019- ஆம் ஆண்டில் இருந்து தற்போதுதான் சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் தற்போதைய நிலவரப்படி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,977- ஆக உள்ளது. கொரோனா 2-வது அலையின் போது சென்னையில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது.

அதாவது கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி 49 ஆயிரத்து 236- பேர் சிகிச்சையில் இருந்தனர். இதுதான் சென்னையில் அதிகபட்சமாக இருந்த நிலையில், 3-வது அலையில் 50 ஆயிரத்தை கடந்து அதிரவைத்துள்ளது. எனினும் ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 2 வது அலையை போல தீவிர பாதிப்புகள் இல்லாமல் பெரும்பாலும் மிதமான பாதிப்புகளே உள்ளதாக சுகாதரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts