உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 22. 01

தேவ தயவும் மனித பயமும்.
சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம். உன்னைக் காக்கும்படிக்கு

நான் உன்னுடனே இருக்கிறேன். எரேமியா 1:8.

அலைகள் வாசக நேயர்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

இன்று உன்னதத்தின் ஆறுதல் இன்று பதின்மூன்றாவது புதியஆண்டிற்குள் காலடி எடுத்து பிரவேசிக்கிறேன். டென்மார்க்கில் வாழும் பலகுடும்பங்கள் அலைகள் பத்திரி கையில் வெளிவரும் உன்னதத்தின் ஆறுதல் மூலம் தேவனை அறியவும், தேவனிடத்தில் இருந்து ஆறுதலைப் பெறவும் தேவன் கிருபை அளித்துள்ளார். அதற்காக தேவனுக்கு நன்றி தெரிவிப்பதோடு, தொடர்ந்து இதனை வெளியிட முன்வந்த பத்திரிகை ஆசிரியர் திரு. கே. செல்லத்துரை அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் திரு. கே. செல்லத்துரை குடும்பத் தினரை தேவன் தாமே ஆசீர்வதித்து காத்து வழிநடத்துவாராக.

இன்றைய சிந்தனையை முழுவதுமாக விளங்கிக்கொள்ள வேதப்புத்தகம் உள்ளவர்கள் எரேமியா 1ம் அதிகாரத்தை வாசித்தால் மிக இலகுவாக புரிந்து கொள்ளமுடியும்.

மீண்டும் ஓர் புதுவருடம் மலர்ந்து விட்டது. இந்தப் புதுவருடத்தை நீங்கள் எப்படி வரவேற்கிறீர்கள்? புதுவருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்பவர்களும் உண்டு. அதேநேரம் அதனை பயத்துடன் எதிர்நோக்குகிறவர்களும் உண்டு. பயமானது சாதாரண மனித வாழ்வில் ஏற்படும் அனுபவமாகும். பயம் சிலவேளைகளில் மனிதர்களுக்கு நன்மை தரக்கூடியதாகவும் இருக்கும். பயம் சிலவேளைகளில் மனிதர்களுக்கு தீமை தரக்கூடியதாகவும் இருக்கும். பயம் நமக்கு இல்லாவிட்டால் பாதையில் போகும்போது எதிரேவரும் வாகனத்தைக் குறித்த சித்தனை, எண்ணமே நமக்கு இருக்காது. அதன் விளைவு கவலையீனமாக நடந்து கொள்வதினால் ஆபத்துக்களை சந்திக்க வேண்டிவரும்.

இப்படிப்பட்ட இயற்கையான பய உணர்வை தேவன் நமக்கு, நம்முடைய பாதுகாப் பிற்காக தந்துள்ளார். அதேபோல நடக்காததை நடந்ததுபோல எண்ணிக்கொள்ளும், அதாவது நாமே நமக்கு அச்சத்தை உண்டுபண்ணிக் கொண்டுள்ளுகிற பயங்களும் உண்டு. அவை நமக்கு தீமையை வருவிக்கக்கூடிய பயங்களாகும்.

ஒரு தடவை தனிமையில் பலதுன்பங்கள் மத்தியில் டென்மார்க்கில் வாழும் விதவைப் பெண்ணிற்கு ஆறுதல் கூறும்படியாக குடும்பமாக சென்றிருந்தோம். அவர்களின் பயம், வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் உண்டானதாகும். அதேநேரம் பலகற்பனைகளின் நிமித்தமாகவும் என அறியமுடிந்தது. ஆறுதல்கூறி அமைதியான வாழ்விற்கு அழைத்துச் செல்ல முயன்றேன். அவர்களின் கற்பனையான வாழ்கையால் இன்றும்கூட வாழ்க்கையில் அமைதியைக்காண முடியாமல் தவிக்கிறார்கள்.

மானிடவாழ்வில் பிறப்பில் இருந்து மரணம்வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் பலவகையான பயங்கள் நம்மை பாதிக்கின்றன. அவைகள் இயற்கையானது. நாம் தேவனைச் சார்ந்து வாழும்போது அவ்வாறன பயங்கள் எம்மை பாதிக்காது.

பிரியமான வாசகநேயர்களே, இன்று உங்கள் உள்ளத்தை சூழ்ந்து இருப்பது என்ன? உண்மை என்னவெனில், ஒருவருக்கு பயத்தை ஏற்ப்படுத்துவது, அவருக்கு ஏற்படும் பாதகமான அனுபவங்கள் அல்ல. மாறாக அவருக்குள் இருக்கும் தவறான நம்பிக்கையே பயத்தை ஏற்ப்படுத்துகிறது. இதனையே மேலே வாசித்த வேதப்பகுதி நமக்கு தெரியப்படுத்துகிறது. (வேதப்புத்தகம் உள்ளவர்கள் 1ம் அதி. வச. 4-10 வரை வாசிக்கவும்). நாமும் தேவனின் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் இவ்வாறான தவறான நம்பிக்கையால் முழுமையாக உணராமல் எமக்குள் பயத்தை ஏற்படுத்துகிறோம். இதன் விளைவாக பலர் தேவனிடம் இருந்து ஆறுதலை, நன்மைகளை அடையமுடியாமல் இன்று தவிக்கிறார்கள்.

இதனை நன்கு உணரும்படியாக சாதாரணமாக நீங்களும் நானும் கண்ட காட்சியை தெரியப்படுத்த விரும்புகிறேன். தாயின் அரவணைப்பில் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஓர் குழந்தையை மற்றவர்கள் தூக்கமுற்படும்போது குழந்தை பயந்து அழும். காரணம் குழந்தைக்கு தெரியும் தனது தாயிடம் மட்டுந்தான் தனக்கு பாதுகாப்பு உண்டென்று. அதுதான் குழந்தையின் நம்பிக்கை.

ஒரு தாயைப்போல அரவணைத்து நடத்தும் கர்த்தர் நமக்கு உண்டென்பதை அறியாமல் உணராமல் நாமும் பயந்து ஓடுகிறோம். ஒதுங்குகிறோம். தாயைப்போல எம்மைக்காக்க ஓர் தேவன் உண்டென்பதை நாம் ஏசாயா 66:13இல் காணலாம். ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் என நம் தேவன் உறுதியளிக்கிறார்.

தேவன் நமது மீட்புக்கான புதிய நித்திய வாழ்வுக்கான சகலவற்றையும் சிலுவையில் செய்து முடித்து விட்டார். அந்த மீட்பைப் பெற்றுக்கொள்ள நாம் எமது வாழ்வில் தீர்மானம் எடுக்க வேண்டும். வேதம் சொல்கிறது, அவர் நமது இயதக் கதவில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறார் என்று. இயேசுவை உள்ளே அழைக்க கதவைத் திறப்பதா? வேண்டாமா? கதவைத் திறந்து உள்ளே அழைப்போமானால் எமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தீர்மானங்கள் எடுக்க வேண்டியவர்களாக இருப்போம். அத்தீர்மானங்கள் எமக்கு தேவனிடத்தில் இருந்து நன்மையைப் பெற்றுக்கொள்ளக் கூடியவைகளாகவும், தேவபாதுகாப்போடு வாழவழியாகவும் இருக்கும்.

நமது தேவன் வலுக்கட்டாயமாக எதனையும் மனிதருக்குள் திணிக்கிறவர் அல்ல. முழச்சுதந்தரத்தையும் எமக்கு கொடுத்துள்ளார். நாம் அவர் சித்தத்திற்கு எம் வாழ்வை அர்ப்பணித்தால், அவர் நம்மை தமது சித்தத்திற்கு ஏற்றபடியாக வழி நடத்துவார். இல்லையானால் அவர் நம்மை கட்டாயப்படுத்த மாட்டார்.

நாம் வாசித்த முதலாம் அதிகாரம் இதனை எமக்கு தெளிவாக கூறுகிறது. ஆகவே இப்புதிய ஆண்டில் நல்ல தீர்மானமாக தேவன் வாழுமிடமாக எமது இதயதவாசலைத் திறந்துகொடுத்து, அவர் தமது சித்தத்தை எம்மில் எம்மைக் கொண்டு செய்ய எம்மை நாம் ஒப்புக்கொடுப்போம்.

அன்பின் பரலோக பிதாவே, இன்று பயத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடக்கூடிய வழியை எனக்கு கற்றுத்தந்ததற்காக உமக்கு நன்றி அப்பா. உமது சித்தத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்து வாழ எனக்கு உதவி செய்யும்படியாக மன்றாடி நிற்கிறேன் பிதாவே ஆமென்.

புதுவருட நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonipillai. Rehoboth Ministries – Pray for Denmark.

Related posts