லண்டனில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு

சில முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்புக்காக ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு லண்டன் சென்றுள்ளது.
வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதால், சுராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.முதலில் இந்தப் படத்துக்கு ‘நாய் சேகர்’ எனத் தலைப்பு வைக்கப் படக்குழு முடிவு செய்தது. ஆனால், சதீஷ் நடித்துள்ள படத்துக்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டதால், பின்னர் இந்தப் படத்துக்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று தலைப்பு வைத்தது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் சில முக்கியக் காட்சிகளையும், ஒரு பாடலையும் படமாக்க ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு லண்டன் சென்றுள்ளது. அடுத்த சில வாரங்கள் லண்டனில் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Related posts