மீண்டும் நடிக்க வரும் விஜயகாந்த்?

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது.

விஜயகாந்த் 1980-ல் ‘தூரத்து இடிமுழக்கம்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். கேப்டன் பிரபாகரன், சட்டம் ஒரு இருட்டறை, ஊமை விழிகள், புலன் விசாரணை, சேதுபதி ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல படங்கள் திருப்புமுனை படங்களாக அமைந்தன. கடைசியாக அவரது நடிப்பில் ‘எங்கள் ஆசான்’ படம் வெளியானது. அதன்பிறகு தீவிர அசியலில் கவனம் செலுத்தியதால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். தனது மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் வந்து போனார்.

மீண்டும் மகனுடன் ‘தமிழன் என்று சொல்லடா’ படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு பட வேலைகள் நின்று போனது. பின்னர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று தற்போது உடல் நலம் தேறி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் அவரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் விஜயகாந்த் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை. விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருவதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

Related posts