மரைக்காயர் பட வதந்திக்கு மோகன்லால் விளக்கம்

மரைக்காயர் பட வதந்திக்கு விளக்கம் அளித்து மோகன்லால் கூறியதாவது:-

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் தயாராகி உள்ள மரைக்காயர் சரித்திர படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தமிழில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், அசோக் செல்வன், சுஹாசினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்திய கடலில் முதன்முறையாக கடற்படையை உருவாக்கி ஆங்கிலேயர்களை எதிர்த்த குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகி உள்ளது. மரைக்காயர் படம் சமீபத்தில் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. இந்த படத்தை தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வெளியிட இருப்பதாக தகவல்கள் பரவின.

இதற்கு விளக்கம் அளித்து மோகன்லால் கூறும்போது, ‘‘மரைக்காயர் படத்தை ​தயாரிப்பாளர்கள் திரையரங்குகளில் வெளியிடவே விரும்பினர். ஓ.டி.டி.யில் வெளியிட எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. அவ்வாறு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தால் தியேட்டர் வெளியீட்டை ஓ.டி.டி. தளத்தினர் அனுமதித்திருக்க மாட்டார்கள். திரையரங்குகளில் வந்த பிறகு மரைக்காயர் படம் மற்ற படங்களைப்போல் ஓ.டி.டி.யிலும் வரும். ரூ.100 கோடி செலவில் தயாராகி உள்ள இந்த படம் ரூ.105 கோடி லாபத்தை ஈட்டித்தரும் என்று நம்புகிறோம்” என்றார்.

Related posts