சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்குகள்

நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் வடிவேலு பங்கேற்று பேசும்போது, “எல்லா பிரச்சினைகளையும் கடந்து நாய் சேகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் சாதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை. இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியும் உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர்களை சிரிக்க வைப்பது எனக்கு பிடித்து இருக்கிறது.

குழந்தைகள் என்னைப்போல் பாவனை செய்வதை கடவுள் கொடுத்த வரமாகவே பார்க்கிறேன். சினிமாவில் எனக்கு போட்டி நான்தான். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் முந்தைய கதாபாத்திரத்தைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என்று உழைப்பேன். இனிமேல் சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறேன். சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலிகணக்குகள் உள்ளன. நான் வலைத்தளத்தில் இல்லை. வலைத்தளத்தில் எனது பெயரில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் போலியானவை’’ என்றார்.

Related posts