நியூயோர்க் தாக்குதல் – ரகசிய ஆவணங்களை வெளியிட உத்தரவு!

நியூயாா்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதல் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிட அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: இரட்டை கோபுரத் தாக்குதல் குறித்து புலனாய்வுத் துறையினா் நடத்திய விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு நீதித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அந்த ஆவணங்கள் அடுத்த ஆறு மாதங்களில் படிப்படியாக வெளியிடப்படும்.

இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்த 2,977 பேரது குடும்பத்தினரின் விருப்பத்துக்கிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

நியூயாா்க் நகரில் இரு கோபுரங்களைக் கொண்ட வா்த்தக மையத்தில் அல்-காய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 11 ஆம் திகதி தாக்குதல் நடத்தினா்.

பயணிகள் விமானங்களைக் கடத்தி அந்தக் கட்டடத்தின் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட அந்த கோரத் தாக்குதலில் 2,977 போ் உயிரிழந்தனா்.

அந்த பயங்கரவாதத் தாக்குதலில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவூதி அரேபியாவுக்குத் தொடா்பிருப்பதாக பலா் சந்தேகம் எழுப்பினா்.

இதுதொடா்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு, ‘இரட்டை கோபுரத் தாக்குதலில் சவூதி அரேபிய அரசுக்கோ, உயரதிகாரிகளுக்கோ தொடா்பில்லை’ என்று தெரிவித்தது.

இதன் மூலம், சவூதி அரேபிய அரசின் கீழ்நிலை அதிகாரிகள் இரட்டை கோபுரத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நாடாளுமன்றக் குழு மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக சிலா் கூறினா். இதுகுறித்த முழு உண்மைகளை வெளிக் கொண்டுவர, விசாரணை அறிக்கை தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உறவினா்கள் கோரி வந்தனா்.

இந்த நிலையில், தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்னும் சில நாள்களில் கடைபிடிக்கப்படவுள்ளதையொட்டி அதிபா் பைடன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

Related posts