குற்றச்சாட்டு சோனியா அகர்வால் கோபம்

தவறுதலாக போதைப்பொருள் குற்றச்சாட்டு சோனியா அகர்வால் கோபம்.

பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் தலை முடியை தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகையான சோனியா அகர்வால் வீட்டில் சோதனை நடத்தி 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஒரே பெயருடன் இருப்பதால் தமிழ் நடிகை சோனியா அகர்வாலை இதில் தவறுதலாக இழுத்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் கோபமான தமிழ்நடிகை சோனியா அகர்வால் கூறும்போது, ”முதலில் யார் என்பதை உறுதி செய்து எழுதுங்கள். சமூக வலைத்தள வதந்திகளை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. ஆனாலும் இது ஒரு தீவிரமான விஷயம். என்னை அழைத்தாவது உறுதி செய்து இருக்க வேண்டும். நான் தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருக்கிறேன்.” என்றார்.

மேலும் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

Related posts