மீண்டும் ஹாலிவுட்டுக்குச் செல்லும் தீபிகா படுகோன்

‘டிரிபிள் எக்ஸ்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். 2017ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘டிரிபிள் எக்ஸ்’ மூன்றாம் பாகத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்துக்காகத் தயாராகி வருகிறார் தீபிகா. இரண்டு வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த இருவருக்கிடையே ஏற்படும் காதலைப் பற்றிப் பேசும் படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை எஸ்டிஎக்ஸ் பிலிம்ஸ் மற்றும் டெம்பிள் ஹில் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தீபிகாவின் கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.
இதுகுறித்து தீபிகா படுகோன் கூறியுள்ளதாவது:
”உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கான கதைகளைத் தயாரிப்பதற்காகவே கா புரொடக்‌ஷன்ஸ் உருவாக்கப்பட்டது. எஸ்டிஎக்ஸ் பிலிம்ஸ் மற்றும் டெம்பிள் ஹில் புரொடக்‌ஷன்ஸ் ஆகியோருடன் இணைந்து இப்படத்தைத் தயாரிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
கா புரொடக்‌ஷன்ஸின் லட்சியம் மற்றும் ஆக்கபூர்வமான பார்வையை அவர்கள் பகிர்ந்து கொள்வதோடு, சிறந்த மற்றும் இரு நாட்டுக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளை உலகுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள்”.இவ்வாறு தீபிகா படுகோன் கூறியுள்ளார்.

Related posts