பொன்னியின் செல்வன் விக்ரம் படப்பிடிப்பு நிறைவு..

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களுக்கான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் விக்ரம்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ஒவ்வொரு முன்னணி நடிகரின் காட்சிகளாக முடிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஜெயம் ரவி இந்தப் படத்தின் அனைத்து காட்சிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டதாக தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார்.
தற்போது விக்ரமும் அவருடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டார். இதில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம். இதனை விக்ரம் தரப்பு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தை முடித்துவிட்டதால் ‘கோப்ரா’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விக்ரம்.
விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகான்’ திரைப்படம் தான் வெளியாகவுள்ளது.

Related posts