‘விக்ரம்’ படத்துக்குப் பின்பே ‘இந்தியன் 2’: கமல் முடிவு

‘விக்ரம்’ படத்தை முடித்துவிட்டு ‘இந்தியன் 2’ படத்தைத் தொடங்க கமல் முடிவு செய்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது எண்ணூரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு, நாளை (ஆகஸ்ட் 24) முதல் காரைக்குடியில் நடைபெறுகிறது. இதில் கமல் – விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு.
‘விக்ரம்’ படத்துக்கு முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் கமல். இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின்போது லைகா நிறுவனம் – ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சினை உருவானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் பணிகளை ஷங்கர் கவனித்து வருகிறார். இதனால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு எப்போது என்பதே தெரியாமல் உள்ளது. தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்துவிட்டதாகவும், ‘விக்ரம்’ முடிந்தவுடன்தான் ‘இந்தியன் 2’ தொடங்கும் எனவும் கமல் அளித்துள்ள பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts