ஓடிடி பார்வை: ஷேர்னி – காப்பதே வீரம்

இயற்கையின் அமைப்பு குறித்த புரிதலோ, உணவுச் சங்கிலி குறித்த தெளிவோ இல்லாமல் காட்டுயிர் வதையைச் சமூகப் பொறுப்பற்ற முறையில் ஆராதிக்கும் விதமாகத் திரைப்படங்கள் காலங்காலமாகக் காட்சிப்படுத்தி வருகின்றன. எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் தொடங்கிய அந்தப் போக்கு இன்றுவரை தொடர்கிறது என்பதற்கு 2016இல் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற ‘புலி முருகன்’ திரைப்படமே சான்று. சாத்தியமில்லாத ஒன்றைச் சாத்தியமாக்கத் துடிக்கும் / ஏங்கும் மனிதனின் நப்பாசைக்கு வடிகாலாகவே இத்தகைய திரைப்படங்களின் நாயக பிம்பங்கள் பொதுவாகக் கட்டமைக்கப்படுகின்றன. அமேசான் பிரைமில், வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஷேர்னி’ அதற்கு விதிவிலக்கு.
புத்துணர்ச்சி அளிக்கும் வித்யா பாலன் வானில் சுழன்று, சுழன்று ஒரே நேரத்தில் பத்து நபர்களை அடிக்கும் நாயகர்களையும் வாய் தைக்கப்பட்ட சிங்கம், புலி போன்ற காட்டுயிர்களுடன் சண்டையிட்டு ஜெயிக்கும் நாயகர்களையும் பார்த்துப் பழகிய நமக்கு, இந்தப் படத்தைத் தன்னுடைய தோளில் தாங்கிச் செல்லும் வித்யா பாலனின் பாத்திர வடிவமைப்பு புத்துணர்வு அளிக்கிறது. படத்தில் வித்யா பாலன் நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர். இந்தச் சமூகம் பெண்களுக்கு விதித்திருக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டே அவருடைய தனிப்பட்ட வாழ்வு அமைந்திருக்கிறது. பணியில் வித்யாவின் செயல்பாடு அவருடைய அதிகார வரம்புக்கு உட்பட்டே சுழல்கின்றது.பன்ச் வசனம் பேசவில்லை, கண்கள் சிவக்க வீர வசனம் பேசவில்லை, ஆக்ரோஷமாகக் கைகளைச் சுழற்றிச் சண்டையிடவில்லை. கண்களில் தென்படும் இயல்பான பரிவோடும், உடல் மொழியில் தென்படும் உண்மையான முனைப்போடும் ஆள் நடமாட்டமற்ற அடர்ந்த காட்டினுள் அவர் தயக்கமின்றி உலவும் காட்சிகளும், உணர்வுவயப்பட்டுக் கோபத்தில் தகித்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைத் தனித்து அணுகும் காட்சிகளும் எந்த ஆக்‌ஷன் கதாநாயகர்களும் ஏற்படுத்தாத தாக்கத்தை நம்மிடம் ஏற்படுத்துகின்றன. அவமானம், இயலாமை, அவற்றை மீறிச் செல்லும் ஆர்ப்பாட்டமற்ற துணிவு போன்றவற்றை வெளிப்படுத்தும் தேர்ந்த நடிப்பு அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று.
கதைக்களம்
வித்யா பாலன் ஒரு நேர்மையான காட்டிலாகா அதிகாரி. இயற்கையை நேசிப்பவர். பணியிடமாற்றம் காரணமாக மத்தியப் பிரதேசத்தின் ஒரு சரகத்தில் அவர் புதிதாகப் பொறுப்பேற்க நேர்கிறது. ஊரின் அமைப்பும் வட்டார அரசியலின் போக்கும் அவருக்குப் புரிபடும் முன்னரே, பெண் புலி ஒன்று அதன் வழித்தடத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களை அடித்துக் கொல்லத் தொடங்குகிறது.
தேர்தல் நேரம் என்பதால், அது அரசியல் பிரச்சினையாக மாறுகிறது. புலியைக் கொல்வோம் என்கிற வாக்குறுதியுடன் புலியைக் கொல்லும் முயற்சிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பிராந்திய அரசியலின் ஆதாயத்துக்காக, புலிகளைக் காக்க வேண்டிய அரசாங்கமும் அந்த முயற்சிக்குத் துணை நிற்கிறது. இதற்கிடையே பணியின் மீது உண்மையான பிடிப்பு கொண்டிருக்கும் வித்யா பாலன் அந்தப் புலியை உயிருடன் வேறு இடத்துக்கு மாற்ற முயல்கிறார். வித்யாவின் நேர்மையான முயற்சிகளுக்கு வரும் தடைகளும் அந்தத் தடைகளை அவரால் உடைக்க முடிகிறதா என்பதுமே ‘ஷேர்னி’.

Related posts