ஓடிடியில் வெளியாகிறது திட்டம் இரண்டு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கப்பட்ட படம் ‘திட்டம் இரண்டு’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படம் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. சென்னையிலேயே ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு.
தற்போது இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ஆனால், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் உள்ளது. இதனால் ‘திட்டம் இரண்டு’ படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய் பணிபுரிந்துள்ளார். இசையமைப்பாளராக சதீஷ் ரகுநாதன், எடிட்டராக சி.எஸ்.பிரேம் குமார், கலை இயக்குநராக ராகுல் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
எந்த ஓடிடியில் வெளியீடு என்பது முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related posts