சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர்

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறி கொடுத்தாலும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. உருவெடுத்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் 65 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பலத்த போட்டி நிலவிய நிலையில், கூட்டம் முடிவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரும் தேர்வு செய்யப்படாமல் அந்த கூட்டம் முடிவடைந்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட தொடங்கினர். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடிப்பதாக கூறப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில், சசிகலா அ.தி.மு.க. தொண்டர்களுடன் பேசி வரும் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமும் ஒரு ஆடியோ என்று பல்வேறு அதிமுக உறுப்பினர்களிடம் போனில் பேசி, அதை இணையத்திலும் வெளியிட்டு வருகிறார்கள்.

சசிகலா அ..தி.மு.க.விலேயே இல்லை எனவே அவரது ஆடியோ பற்றி கவலையில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். ஆனால் சசிகலா ஆடியோ குறித்து ஓ.பன்னீர்செல்வம் எந்தவொரும் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு இன்று (திங்கட்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அ.தி.மு.க.வினரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“தமிழகத்தை சமதர்மத்தின் புதிய பூமியாக மாற்றிட ஏழை, எளிய, உழைக்கும் வர்க்கத்தினரும், புதுவாழ்வு காண புதிய பாதை தேடிய இளைஞர் கூட்டமும், தியாகத் திருவிளக்குகளாம் தாய்க்குலமும் கண்ட மாபெரும் கனவை அதிமுக என்ற ஒப்பற்ற இயக்கத்தின் மூலம் நிறைவேற்றியவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவைக் காணாமல் போகச் செய்துவிடலாம் என்று மனப்பால் குடித்தவர்களின் மனக் கணக்குகளை தூள், தூளாக்கி, மீண்டும் அதிமுகவை உலகம் புகழும் இயக்கமாக்கிக் காட்டியவர் ஜெயலலிதா. தனது வாழ்வின் அற்புதமான 34 ஆண்டுகளை அதிமுகவின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் உயர்வுக்காகவும் ஆயிரம் இன்னல்களுக்கிடையே அரும்பாடுபட்டவர் ஜெயலலிதா.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் மீது, அதிமுக உடன்பிறப்புகள் தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து, கண்ணை இமை காப்பதுபோல் அதிமுகவைக் காத்து நிற்கும் காவல் தெய்வங்களாய் இடையறாது பணியாற்றி வருகின்றனர்.

‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் புயல் வீசும்; அனைத்தும் தகர்ந்து போய்விடும்; இனி தமிழகத்தில் குழப்பம் தான் மிஞ்சும்’ என்று எண்ணி இருந்தோருக்கு ஏமாற்றத்தைப் பரிசளித்து, ‘எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே’ என்று மெய்ப்பித்து ஜெயலலிதா அளித்துச் சென்ற ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம். இந்த சாதனையைக் கண்டு நம் எதிரிகளும் வியந்து நின்றனர்.

மாபெரும் கூட்டணி, பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதிகள், பசுத்தோல் போர்த்திய புலிகளாய் பகல் வேஷம் என்ற பரிவாரங்களுடன் வந்து, மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்த திமுக மற்றும் எதிர் அணி, சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.

சூழ்ச்சிகள், தந்திரங்கள், சதிச் செயல்கள் அனைத்தையும் முறியடித்து, மக்களின் பேரன்பைப் பெற்று, அதிமுகவின் தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக, அதிமுகவின் 66 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழகத்தின் நலனுக்காக சட்டப்பேரவையில் உரக்கக் குரல் எழுப்பி, உண்மை மக்கள் தொண்டர்களாகப் பணியாற்ற துடித்துக்கொண்டிருக்கின்றனர்.

உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர், அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக் கொண்டிருக்கின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த திருமதி சசிகலா, இப்போது அதிமுக இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

மகத்தான இரு தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால் ஓங்கு புகழ் பெற்றிருக்கும் அதிமுக மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்பதை நினைவுபடுத்துகிறோம்.

அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கடந்த 23.5.2021-ம் தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, அதிமுகவின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்; இழுக்கும், பழியும் தேடியவர்கள் அனைவரையும் அதிமுகவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும்; இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் மூத்த முன்னோடிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

அதிமுக வேட்பாளர்களுக்கும், அதிமுகவின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து, 75 சட்டப்பேரவை உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ததோடு, 234 தொகுதிகளிலும் தங்களின் பொன்னான வாக்குகளை வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் கரம்கூப்பி நன்றி கூறுகிறோம்.

கண்ணின் மணியென அதிமுகவைக் காப்போம். எம்ஜிஆர் கண்ட கனவை நினைவாக்குவோம்.

எனக்குப் பின்னாலும் நூறாண்டுகள் ஆனாலும் கழகம் மக்கள் தொண்டில் முன்னணியில் நின்று பணியாற்றும் என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்”.

இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்மொழிந்துள்ளனர். அனைத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் வழிமொழிந்துள்ளனர்.

இந்த நிலையில் சசிகலாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

அதில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். கட்சியினர் யாரும் அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுதவிர, தேனி மாவட்ட மீனவர் பிரிவு துணைச் செயலாளர் அழகர்சாமி, முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்பி வி.கே.சின்னாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 16 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Related posts