பேச்சுவார்த்தையிலே நின்ற விஜய் – ஷங்கர் கூட்டணி

கரோனா ஊரடங்கு சமயத்தில் விஜய் – ஷங்கர் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘நண்பன்’. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இது இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக் ஆகும். ஷங்கர் இயக்கிய ஒரே ரீமேக் படம் இது மட்டுமே.
இந்தப் படத்துக்கு முன்பும், பின்பும் பல முறை விஜய் – ஷங்கர் கூட்டணியை இணைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எதுவுமே அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. ’நண்பன்’ படத்துக்குப் பிறகு இந்தப் பேச்சுவார்த்தை அடிக்கடி நடப்பதுண்டு.
கரோனா ஊரடங்கு சமயத்தில் கூட விஜய் – ஷங்கர் சந்திப்பு நடைபெற்றது. ‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு விஜய் படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்து, கதை கூறினார் ஷங்கர்.
அந்தக் கதை விஜய்க்குப் பிடித்திருந்தாலும் அடுத்த கட்டத்துக்கு இந்தப் பேச்சுவார்த்தை செல்லவில்லை. காரணம் படத்தின் பட்ஜெட். சில முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்தக் கூட்டணி குறித்துப் பேசியபோது, இருவருக்கும் சம்பளம் கொடுத்து இந்தப் பொருட்செலவு என்பது வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர். அதனாலேயே இந்தக் கூட்டணி இணையவில்லை என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யிடம் சொன்ன கதையைத்தான் தற்போது ராம்சரணிடம் சொல்லி ஓ.கே. செய்துள்ளார் ஷங்கர். அதன் பணிகளைத்தான் தற்போது மும்முரமாகக் கவனித்து வருகிறார்.

Related posts