ஸ்டண்ட் சில்வாவுக்கு புகழாரம் சூட்டியுள்ள சுப்பிரமணிய சிவா

ஸ்டண்ட் சில்வாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் சுப்பிரமணிய சிவா.
இந்தியத் திரையுலகின் முக்கியமான சண்டைக் காட்சிகளின் இயக்குநர்களில் ஒருவர் ஸ்டண்ட் சில்வா. பல முன்னணி நடிகர்களின் படங்களுக்குச் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஸ்டண்ட் சில்வா இயக்குநராகப் போகிறார் என்ற தகவல் வெளியானது.
எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்புமே இல்லாமல், தனது படத்தை முடித்துள்ளார் ஸ்டண்ட் சில்வா. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இயக்குநர் சுப்பிரமணிய சிவா. ஸ்டண்ட் சில்வா படம் தொடர்பாக சுப்பிரமணிய சிவா தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:”மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா இந்தியாவின் சண்டை இயக்குநர்களில் முக்கியமானவர்களில் ஒருவர். இயக்குநர் விஜய் எழுதிய கதையில், அண்ணன் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல், பூஜா கண்ணன்(சாய் பல்லவி தங்கை) நடிக்க, தம்பி சில்வா முதல்முறையாக இயக்கும் இப்படத்தில் என்னை நட்புக்காக 7 நிமிடம் வர கூடிய ஒரு முரட்டுகாட்சியில் நடிக்க வைத்தார்,
இன்று டப்பிங் முடித்தேன். படத்தின் சில காட்சிகளைக் காட்டினார். பார்த்த நான் அசந்து விட்டேன். முரட்டு உருவம் கொண்ட, ஒரு சண்டை இயக்குநரிடம், பூக்கள் தாலாட்டு பாடுவது போல் ஒரு கவிதை படம், பாச உணர்வுகள் மேலோங்கி, நம் கண்களைப் பனிக்கச் செய்யும் சிறந்த காட்சிகள் அவை,
மிகச் சிறப்பு தம்பி. உன்னிடம் இப்படி ஒரு உணர்ச்சிப் பூர்வமான படத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஃபீல் குட் மூவி என்பார்களே, அவற்றினுள் முக்கிய படமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஸ்டன்ட் சில்வாவே அன்பால் நிறைந்தவனே, மிக பெரிய வெற்றியும், பேரும் உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.இப்படத்தின் வழியாக இன்னும் பல சாதனைகள் செய்து வாழ்வாங்கு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி”
இவ்வாறு சுப்பிரமணிய சிவா தெரிவித்துள்ளார்.

Related posts