மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து..

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளார்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

பதவி ஏற்பு விழாவுக்காக மு.க.ஸ்டாலின் காலை 8.45 மணிக்குத் தனது இல்லத்திலிருந்து அரசாங்கம் வழங்கிய அரசு முத்திரையுடன் கூடிய காரில் ஏறி கவர்னர் மாளிகை நோக்கி வந்தார். சரியாக 8.55 மணிக்கு ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேடையில் அமர்ந்த ஸ்டாலின், அமைச்சர்களிடம் கோப்புகளில் கையெழுத்து பெற்றபின் நடைமுறைகள் என்னென்ன என்று ஸ்டாலினிடம் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் விளக்கிக் கூறினார்.

சரியாக 9 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் அரங்கிற்கு காரில் வந்து இறங்கினார். கவர்னரை திமுக தலைவர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் சபரீசன், பேரக் குழந்தைகளை ஸ்டாலின் கவர்னருக்கு அறிமுகப்படுத்தினார். கவர்னர் பேரக் குழந்தைகளை அருகில் அழைத்துக் கொஞ்சினார். பின்னர் அனைவரும் மேடைக்குச் சென்றனர்.

பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆளுநர் ஸ்டாலினுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலின் எனும் நான் என கவர்னர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். அப்போது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். யாரும் கவனிக்காவண்ணம் கண்களை துடைத்துக் கொண்டார். பின்னர் முதல் அமைச்சராக பதவி ஏற்று கொண்ட ஸ்டாலினுக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.கவனருக்கு ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து அளித்தார்.

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களாக துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். நீர் பாசனத்துறை அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.க.பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

அனைவரும் பதவி ஏற்று கொண்டவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பதவியேற்பு விழாவையடுத்து, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் கவர்னர் தேநீர் விருந்து அளித்தார். மு.க.ஸ்டாலின், துரைமுருகனுடன் ஓ.பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் அருகருகே அமர்ந்து தேநீர் அருந்தினர்.

பின்னர் சென்னை- கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார்.

அங்கு கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஆனந்தத்தில் கண்கலங்கினார்.

மேலும் அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அவரது சகோதரி மு.க.செல்வியும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதன்பின்னர் சென்னை, மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றார். கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதையை செலுத்தினார். தொடர்ந்து அண்ணாவின் நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களும் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தை தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து க.அன்பழகன் இல்லம் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமைச் செயலகம் சென்றா. தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையின் மரியாதையை ஏற்றார் . தொடர்ந்து முதல்-அமைச்சர் அறையில் இருக்கையில் அமர்ந்தார்.

1. முதல் அரசாணையாக கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000-ஐ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரசாணை. இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. அது இந்த மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.3. மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமல்.

4. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுகிறார்.

5. கொரோனா சிகிச்சை பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும். ஆகிய 5 முக்கிய கோப்புகளில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

Related posts