கே.வி.ஆனந்த் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (ஏப்.30) மரணமடைந்தார். அவருக்கு வயது 54.
அயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்ட இவர் 90களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவக்கினார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார்.
பின்னர் 1994ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘தேன்மாவின் கொம்பத்’ படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கே.வி.ஆனந்துக்கு கிடைத்தது.பிறகு 1996ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்படம் நல்ல வரவேற்பை பெறவே பின்னர் தொடர்ந்து நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
2005ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் கே.வி.ஆனந்த் இயக்குநராக அவதாரமெடுத்தார். ஆனால் 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் அவர் இயக்கிய ‘அயன்’ படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து 2011ஆம் வெளியான ‘கோ’ படத்தின் வெற்றி கே.வி.ஆனந்தை தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக முன்னிறுத்தியது.
இறுதியாக 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த ‘காப்பான்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் விவேக்கின் மறைவு ஏற்படுத்தியே இன்னும் விலகாத நிலையில் தற்போது கே.வி.ஆனந்தின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

—–
இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்.30) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், தானே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்பு அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்தில் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் பின்னர் ‘கனா கண்டேன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘அயன்’, ‘கோ’, ‘கவன்’ ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

——

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஒளிப்பதிவாளராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் பின்னர் ‘கனா கண்டேன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘அயன்’, ‘கோ’, ‘கவன்’ ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

—–

அவர் நம் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். ஆனால் எப்போதும் நம் இதயத்தில் இருப்பார். கே.வி.ஆனந்த் சார் நீங்கள் என்றென்றும் நினைவுகூரப்படுவீர்கள். அவரது ஆன்மாவுக்கு எனது பிரார்த்தனைகள்.
இவ்வாறு மோகன்லால் கூறியுள்ளார்.
மோகன்லால் நடித்த ‘தேன்மாவின் கொம்பத்’ படத்தில் தான் கே.வி.ஆனந்த் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய ‘காப்பான்’ படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts