திரையரங்குகளுக்கு கடுமையான இழப்பு

தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் திரையரங்குகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படும் என்று உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, அவரது முகாம் அலுவலகத்தில் தலைமைச் செயலர் உள்ளிட்டோருடன் நேற்று (ஏப். 18) ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டுகள் வரும் (ஏப்.20) முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திரையரங்குகள் மூடப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால் தியேட்டர் அதிபர்கள், சினிமா தொழிலாளர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இந்தச் சூழலில் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டால் இன்னொரு நஷ்டத்தை தங்களால தாங்க இயலாது என்று திரையரங்க உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியுள்ளதாவது:
கடந்த ஆண்டு ஊரடங்கின் போது திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியாமல் இதுவரை மொத்தம் 112 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாகத் தான் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு மெல்ல இயல்பு திரும்புகிறது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு 50 சதவீத இருக்கைதான் அனுமதி என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
தற்போது தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் எங்களால் இரவு காட்சிகளை திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓரளவு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமையும் திரையரங்குகளை திறக்க முடியாது. இந்த அறிவிப்பால் திரையரங்குகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படும். 300க்கும் அதிகமான திரையரங்குகள் மூடப்படும் நிலை ஏற்படும். இது குறித்து நாளை முக்கிய ஆலோசனையை திரையரங்க உரிமையாளர்கள் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related posts