நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று முன் தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அக்‌ஷய் குமார் அவரது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் எடுத்துக்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் எல்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று அதில் தெரிவித்துள்ளார்.

——

பிரபல இந்தி நடிகர் கோவிந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவிந்தா கூறும்போது, ‘’நான் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட்டு வந்தேன். ஆனாலும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது.
லேசான பாதிப்பே உள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு தொற்று இல்லை என்று வந்தது. எனது மனைவி சுனிதாவுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று இரண்டு வாரங்களுக்கு முன்பு குணமடைந்தார். தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

இதுபோல் இந்தி நடிகை பூமி பெட்னெகருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் என்னை தனிமைப்படுத்தி உள்ளேன். மருத்துவர்கள் அறிவுரையை பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நான் பாதுகாப்புடன் இருந்தும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. அனைவரும் முககவசம் அணியுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்” என்று கூறியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், நடிகைகள் நிவேதா தாமஸ், கவுரி கிஷன் ஆகியோரும் கொரோனா தொற்றில் சிக்கினர்.

கொரோனா இரண்டாவது அலையில் முன்னணி நடிகர்-நடிகைகள் சிக்கி வருவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts