கையடக்கத் தொலைபேசி செயலிக்கு நிதியளித்த அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவின் அனுசரனையுடன் கொழும்பு சட்ட சங்கம் தனது உறுப்பினர்கள் இணையத்தினூடாக நிகழ்நிலை சட்ட வள ஆதாரங்கள் மற்றும் நீதிமன்ற நாட்காட்டிகளை அணுகுவதற்கு ஏதுவாக அண்மையில் கையடக்கத்தொலைபேசி செயலியொன்றை அங்குரார்ப்பணம் செய்தது. நீதிமன்ற நாட்காட்டிகள் மற்றும் சட்ட அறிக்கைகைகள் தற்பொழுது விரல் நுனிகளிலேயே கிடைப்பதால் சட்டத்தரணிகள் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும்.

இந்த கையடக்கத் தொலைபேசி செயலிக்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பு (USAID) நிதியுதவி வழங்கியதுடன், இலங்கையில் துறைசார் சட்ட சங்கமொன்றுக்கு இவ்வாறானதொரு செயலி நிறுவப்பட்டிருப்பது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். மிகவும் பணிச்சுமை மிக்க கொழும்பு சட்ட சங்கத்தின் உறுப்பினர்களான சட்டத்தரணிகள் தமது கையடக்கத் தொலைபேசி கருவிகள் மூலம் புதிய கல்வி வளங்களை பெறமுடிவதோடு, பணிச்சுமை மத்தியிலும் தற்போதைய ஆய்வுகள் மற்றும் தகவல்களை அவர்கள் விரைவில் பெறமுடியும்.

மார்ச் 5 ஆம் திகதி நடைபெற்ற இச்செயலியை அங்குரார்பண நிகழ்வில் இலங்கையின் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி அதிமேதகு ஜயந்த ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், ´இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கையடக்கத் தொலைபேசி செயலியானது விரைவானதும், வினைத்திறன் மிக்கதுமான சேவையை வழங்கும் என்பதுடன், உறுப்பினர்கள் இந்தப் புதிய செயலியினூடாக வழங்கப்படும் சேவைகளை மிகவும் விரும்புவார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை´ என்றார்.

இந்த செயலி இலங்கை சட்ட வல்லுநர்களுக்கு ஐக்கிய அமெரிக்க நிதி ஒத்துழைப்பன் ஒரு அங்கம் மட்டுமே. 2020 ஆம் ஆண்டு கொழும்பு சட்ட சங்கம் அமெரிக்காவின் உதவியுடன் ஹல்ப்ட்ஸ்டோர்ப் சட்ட சஞ்சிகையின் (Hulftsdorp Law Journal) பதிப்பொன்றை வெளியிட்டிருந்தது. நிகழ்நிலை சட்டப் பயிற்சியுடனிணைந்த இந்த சஞ்சிகையானது, நாடு முழுவதும் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் சட்ட மாணவர்களுக்கு மூலோபாய மற்றும் நடைமுறை கருவிகளை வழங்குகிறது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்துள்ள துறைசார் சட்ட வல்லுனர்களைக் கொண்ட கொழும்பு சட்ட சங்கத்தில் கொழும்பைத் தளமாகக் கொண்ட 4,000 ற்கும் அதிகமான சட்டத்தரணிகள் உள்ளனர்.

´இலங்கை மற்றும் உலகத்தில் விரைவாக மாறிவரும் சமூக-பொருளாதார சூழலின் தேவைகளுக்கு ஏற்ப சட்டவல்லுனர்களுக்கு உதவுவதில் தொடர்ச்சியான சட்டக் கல்வி மற்றும் தகவல்களுக்கான உடனடி அணுகல் என்பன முக்கியமானவை´ என USAID இன் பணிப்பாளர் ரீட் ஏய்ஸ்லிமன் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் சூழலில் கொழும்பு சட்ட சங்கமானது இலங்கையின் சட்டத்தரணிகள் மற்றும் சட்ட மாணவர்களுக்கு நிகழ்நிலை கல்வியை முன்னோடியாக வழங்கியிருந்ததுடன், எதிர்கால பயிற்சிகளை வழங்க தொடர்ச்சியான கல்வி கட்டமைப்பொன்றை உருவாக்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் கொழும்பு சட்ட சங்கம் சட்ட வல்லுநர்களுக்கு 25 நிகழ்நிலை சட்டப் பயிற்சி அமர்வுகளை நடத்தியிருந்ததுடன், சிரேஸ்ட், கனிஸ்ட சட்டத்தரணிகள் மற்றும் பயிலுனர்களுக்குத் தீவிர பயிற்சிகளை வழங்கவுள்ளது.

Related posts