100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா

உப்பெனா’ படத்தின் ஒட்டுமொத்த வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிப்ரவரி 12-ம் தேதி வெளியான தெலுங்குப் படம் ‘உப்பெனா’. சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமானார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி, வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்தனர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது ‘உப்பெனா’. இந்தப் படத்தை தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பலர் பார்த்துவிட்டுப் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தனர்.
முதல் 3 நாட்களிலேயே மொத்த வசூலில் 50 கோடி ரூபாயைத் தாண்டி ‘உப்பெனா’ சாதனை புரிந்தது. ஒரு அறிமுக நாயகனின் படம் 3 நாட்களில் 28 கோடி ரூபாய் பங்குத் தொகையாக மட்டுமே கிடைத்திருப்பது தெலுங்குத் திரையுலகின் மாபெரும் சாதனை என்று வர்த்தக நிபுணர்கள் குறிப்பிட்டார்கள். தற்போது கூட பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வருகிறது ‘உப்பெனா’.
இந்நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், உலகளாவிய மொத்த வசூலில் ‘உப்பெனா’ படம் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக அறிவித்துள்ளது. இதனைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். அறிமுக நாயகர்களின் படங்களின் வசூல் சாதனை அத்தனையையும் ‘உப்பெனா’ முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts