அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் : சுமந்திரன்

தமிழ் தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் காலம் கடந்து ஞானம் வந்தது போல் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஓடித்திரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகள்,வட கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதினமுதல்வர்கள், மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது என்ற கருத்தை நாங்கள் எல்லாருமே ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

அதனை மத தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அந்த அரசியல் ஒற்றுமையை எவ்வாறு வேகமாகவும், தீவிரமாகவும் நகர்த்துவது என்பது பற்றி ஒவ்வொரு கட்சிகளும் தமது தீர்மானம் எடுக்கும் கூட்டங்களிலே பேசி தீர்மானங்களை எடுத்த பின்னர் வெகு விரைவில் ஒரு கட்டமைப்பாக முன்னேறுவது குறித்த நடவடிக்கையை எடுப்போம்.

இக்கலந்துரையாடலில் எந்தவித முரண்பாடு இல்லாத நிலையிலும் அழைப்பு விடுக்கப்பட்ட அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் இது ஒரு தேர்தல் கட்டமைப்பே கிடையாது. இது இன்று தமிழர்களிற்கு ஒரு அத்தியவசிய தேவை அதனை பொறுப்போடு நாம் அணுக வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதற்கு தேவையான ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம்.

ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பாக பலநாடுகள் நடுநிலமையை பேணும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக இணை அனுசரணை வழங்கும் நாடுகள் பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

அதை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே இலங்கை அரசு கட்டாய ஜனாஸா எரிப்பு என்ற விடயத்தை நீக்கியிருக்கிறது. முஸ்லிம் நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்ற எண்ணத்தில் இதனை செய்திருக்கிறார்கள்.

எனினும் இஸ்லாமிய நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மாற்ற மாட்டார்கள் என்று நம்புகிறோம். அதேபோல சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமல் போனவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் தெரிவித்துள்ளார்.

-வவுனியா தீபன்-

Related posts