இங்கிலாந்தில் உச்சம் தொட்ட கொரோனா 24 மணி நேரத்தில் 1,610 பேர் மரணம்

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா மரண எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத புதிய உச்சத்தை தொட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் தேசிய ஊரடங்கு நீடிக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,610 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல், இது எப்போதும் இல்லாத புதிய உச்சம் இது என கூறப்படுகிறது. 6 நாட்களுக்கு முன்னர் 1,564 பேர்கள் கொரோனாவுக்கு பலியான நிலையில், அதுவே அதுவரையான புதிய உச்சம் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,355 என தெரிய வந்துள்ளது.இதனால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,466,849 என உத்தியோகப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், கொரோனாவால் மொத்த மரண எண்ணிக்கை மட்டும் 91,470 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்பிக்கை அளிக்கும் வகையில், இரண்டு வாரத்திற்கு முன்னர், ஜனவரி 5 அன்று பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட, தற்போது சரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் ஜனவரி 5 அன்று 60,919 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் ஒரே நாளில் அதிக மரண எண்ணிக்கை பதிவு செய்யப்படுவது, இதுவே முதல் முறை எனவும்,1,564 இறப்புகளை பதிவு செய்த ஜனவரி 13 ம் தேதி இரண்டாவது மிக மோசமான நாள் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, டிசம்பர் 8 முதல் ஜனவரி 18 வரையான காலகட்டத்தில் இங்கிலாந்தில் மொத்தம் 4,266,577 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்ட பின்னர் வெளியாகும் பாதிப்பு மற்றும் இறப்பு என்ணிக்கை இதுவாகும்.

இதனிடையே, வேல்ஸ் பகுதியில் புதிதாக 1106 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 182,599 என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 4,302 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts