ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, 2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம்.

சுபீட்சத்தை நோக்கிய பயணம் வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்பாராத விதமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் நோய்த்தொற்றினை வெற்றிகொள்ள முழு உலகுடனும் இணைந்து நாமும் முன்னிலை வகித்துள்ளோம். கடுமையான சவால்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலும், தேசிய அபிலாஷைகளின் அடிப்படையில் நிலையான அபிவிருத்திக்கு அடித்தளம் அமைக்க எமக்கு முடிந்தது.

மக்களின் எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புதிய ஆண்டில் மேலும் வலுப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது. மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி மற்றும் தேசிய தனித்துவத்தைப் பாதுகாக்கும் எதிர்பார்ப்புடனேயே புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. நாட்டுக்கும் மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் செயற்படாது என்ற அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வீண்போக நாம் இடமளிக்கமாட்டோம்.

´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இலக்கு மைய அபிவிருத்தி திட்டங்களை சாத்தியப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான பணியாகும். இதற்காக அரச சேவையும் தனியார் துறை நிறுவனங்களும் இணைந்து செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும். அனைத்து அரச ஊழியர்களும் தமக்கு வழங்கப்படும் பணிகளை மிகச் சரியாக நிறைவேற்றுவார்களேயானால் எந்தவொரு தடையையும் வெற்றிகொள்வது அரசாங்கத்திற்கு கடினமானதல்ல. அந்த அர்ப்பணிப்பை அனைத்து அரச ஊழியர்களிடமும் நான் எதிர்பார்க்கின்றேன். அதேபோன்று அனைத்து பிரஜைகளும் தமது தாய்நாடு குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றேன்.

பிறக்கும் புத்தாண்டில் எத்தகைய தடைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தாலும் அவற்றை வெற்றிகொள்வதற்கான ஆத்ம பலமும் தைரியமும் எம்மிடம் உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதற்கு தேவையான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக நாட்டில் அந்த நம்பிக்கையை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். ஒழுக்கப்பண்பாடான நாட்டில் பொருளாதார மற்றும் சமூக செழிப்பு பற்றி புதிதாக குறிப்பிட வேண்டியதில்லை. எனவே, நாம் அனைவரும் ஒழுக்கப் பண்பாட்டுடன் எமது கடமைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு இந்த ஆண்டிலும் உறுதிகொள்வோம்.

மலரும் புத்தாண்டு எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் நோய்நொடிகள் இல்லாத வளமானதொரு எதிர்காலத்தை கொண்டு வர எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்.

—–

சுபீட்சத்திற்கான எதிர்பார்ப்புகளுடன் மலர்ந்துள்ள 2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

பாதுகாப்பான தேசத்திற்காக எமது தாய்நாட்டின் எதிர்காலம் குறித்து மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை அன்புடன் நினைவுகூருகின்றோம்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலமே ஆன போதிலும், அக்காலப்பகுதியை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக செலவிடக்கூடியதாக அமைந்தமை குறித்து பெருமை கொள்கின்றோம்.

ஐந்து வருட காலமாக தடைப்பட்டிருந்த நாட்டின் மனிதவள மற்றும் பௌதீக அபிவிருத்தி செயற்பாடுகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எமக்கு முடியுமானதாயிற்று. மக்களுக்கு அதனை கண்டு மகிழ்ச்சியடைய முடியும்.

கொவிட்-19 வைரஸின் சவாலுக்கு உலக நாடுகள் போன்றே நாமும் முகங்கொடுத்து வருகின்றோம்.

வைரஸின் தாக்கத்தை குறைப்பதற்கு வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார், பாதுகாப்புப் படையினர், அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 24 மணி நேர அர்ப்பணிப்பு மிகுந்த சேவை அளப்பரியது.

கொவிட்-19 தொற்று காரணமாக மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படாதிருக்கும் வகையில் உச்ச தலையீட்டுடன் அரசாங்கம் பங்களிப்பு செலுத்திவருகிறது.சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும் ஒழுக்கம் மிகுந்த பொதுமக்களின், அரசாங்கத்திற்கான ஆதரவும் அளப்பரியதாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள இந்த சவால்களை மலர்ந்துள்ள புத்தாண்டில் நாம் ஒன்றிணைந்து வெற்றிக்கொள்ள முடியும்.உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அரச பொருளாதார கொள்கை திட்டத்தினூடாக நாட்டிற்குள் புதிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி புரட்சி ஏற்படும் என்பது உறுதி.

அதன் மூலம் உங்களதும், நாட்டினதும் எதிர்காலம் சாதகமான முறையில் வளர்ச்சியடையும் ஒரு சுபீட்சமான தேசம் உருவாகும்.மிகக் குறுகிய விடயங்கள் காரணமாக நாம் இனிமேலும் வேறுபாடுகளுடன் காணப்படக் கூடாது.

எமது எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே இன்று நாம் இத்தாய்நாட்டிற்காக கடினமாக உழைத்து எம்மை அர்ப்பணித்து வருகின்றோம். எனவே சமூக கலாசார மற்றும் மத சகவாழ்வுடன் செயற்படுவதன் மூலம் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு மலர்ந்துள்ள இப்புத்தாண்டை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

மலர்ந்துள்ள இவ்வருடம் அனைவருக்கும் சபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன்.

Related posts