சர்வதேச படவிழாவில் நயன்தாரா தயாரித்த படம் போட்டி

நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து, ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தப் பட நிறுவனம் சார்பில், ‘கூழாங்கல்’ என்ற படத்தை இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். பி.எஸ்.வினோத்ராஜ் டைரக்டு செய்து இருக்கிறார்.

‘கூழாங்கல்’ படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) நெதர்லாந்தில் நடைபெற இருக்கும், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பட விழாவின் உயரிய அங்கீகாரமான ‘டைகர்’ விருதுக்கு போட்டியிடுகிறது, ‘கூழாங்கல்’.

இதுபற்றி நயன்தாரா, விக்னேஷ்சிவன் இருவரும் கூறியதாவது:

“மிக அரிதான படைப்பை பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்து எப்போதாவதுதான் சந்தோசப்படுகிறோம். ‘கூழாங்கல்’ படத்தை பார்த்தபோது அப்படி ஒரு அனுபவம் எங்களுக்கு ஏற்பட்டது. படம் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. மிகத் திறமையான படக்குழுவினரால் உருவான இந்தப் படத்தை பார்த்து வியந்தோம். தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்து இருக்கிறார், யுவன்சங்கர்ராஜா.

இந்தப் படத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்த திரை அனுபவத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வது என முடிவு செய்து, படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளோம்”.

Related posts