இந்தியாவில் ஒரு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 5 மாதங்களில் மிக குறைந்த ஒரு நாள் பாதிப்பு இதுவாகும்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து மாதங்களில் (ஜூலை 7 முதல்) மிகக் குறைந்த ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கையாகும். மொத்த பாதிப்பு 99,06,165 ஆக அதிகரித்துள்ளது. 354 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,43,709 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,477 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 94,22,636 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.3,39,820 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோர் எண்ணிக்கை 94.22 லட்சத்தை கடந்தது.

தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 95.12 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.45 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 3.43 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,93,665 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 15 கோடியே 55 லட்சத்து 60 ஆயிரத்து 655 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா அதிக பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் மராட்டிய மாநிலத்தை தொடர்ந்து நான்கு தென் மாநிலங்கள் உள்ளன – கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா.

Related posts