நடிகை சித்ரா மரணம் தற்கொலை தான் என பிரேத பரிசோதனை

நடிகை சித்ரா மரணம் தற்கொலை தான் என பிரேத பரிசோதனையில் தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்பதற்காக சென்னை நசரேத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த நடிகை சித்ரா நேற்று இரவு 2.30 மணிக்கு ஓட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டு சென்றவர், தான் அணிந்திருந்த புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சித்ராவின் வலது கன்னம் மற்றும் தாடையில் ரத்தக் காயம், சம்பவத்தின் போது அவரது கணவர் ஹேம்நாத் உடனிருந்தது என அவரது மரணத்தில் சந்தேக ரேகைகள் படர்ந்தன. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என சந்தேகங்கள் வலுத்து வருகின்றன.

இதனிடையே சித்ரா மரணம் தொடர்பாக ஆர்டிஒ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை, நேற்று ஆய்வு செய்த சென்னை மத்திய மண்டல ஆர்.டி.ஓ. லாவண்யா, காயங்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்றது. பிரேதபரிசோதனை முடிந்து சித்ராவின் உடல் கோட்டூர்புரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சித்ராவின் கன்னத்தின் தாடைப்பகுதியில் இருந்த காயங்கள் எதனால் ஏற்பட்டது. அவரது நகக்கீரலா, அல்லது வேறு ஒருவரால் ஏற்படுத்தப்பட்டதா என்பது பிரேதப்பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தெரியவரும்.

ஒருவர் தூக்கில் தொங்கி உயிர்நீத்தால் அவரது கழுத்து எழும்பு உடைந்திருக்கும் என்றும் அதை வைத்து தூக்கிட்டதால், உயிரிழந்தாரா அல்லது உயிரிழந்த பின்னர் தூக்கிலிடப்பட்டாரா என்பதை சொல்லமுடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே போல் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழக்கும் போது, சுவாசிக்க முயற்சித்து நாக்கு வெளியில் வரும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் சித்ரா விவகாரத்தில் அப்படியான விஷயங்கள் இல்லை என சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே பிரேதப்பரிசாதனை முடிவுகள் வெளியான பிறகு தான் சித்ரா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என கூறப்பட்டது. ஆனால் நடிகை சித்ரா மரணம் தற்கொலை தான் என பிரேத பரிசோதனையில் தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts