சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் ரப்பர் பாம்புதான்

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தில் ரப்பர் பாம்புதான் பயன்படுத்தப்பட்டது என்று வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் சிம்பு கரும்பு காட்டுக்குள் நின்றுகொண்டு கையில் ஒரு பாம்பை வைத்திருப்பதுபோல் இருந்தது. மேலும் சிம்பு ஒரு பாம்பை பிடித்து சாக்கு பைக்குள் போடுவது போன்ற வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இதனைதொடர்ந்து சிம்பு பாம்பை துன்புறுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் படக்குழுவினரிடம் விசாரணை நடத்தினர்.

அந்தக் காட்சியை பிளாஸ்டிக் பாம்பு ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்படவுள்ளது. இந்த காட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

கணினி கிராபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் விசாரித்து வருகின்றோம் என்று இயக்குனர் சுசீந்திரன் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஈஸ்வரன் பட போஸ்டர், டிரெய்லரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய விலங்கு நல வாரியமும் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அனுமதியின்றி பாம்பு காட்சிகளை பயன்படுத்தியது குறித்து 7 நாட்களுக்குள் படக்குழு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இதுபற்றி விளக்கம் கேட்டு படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து, அந்த காட்சி எடுக்கப்பட்டது குறித்து, இயக்குனர் சுசீந்திரன் வனத்துறை அதிகாரியிடம் நேரில் சென்று விளக்கினார். இது குறித்து வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் கூறும்போது, ரப்பர் பாம்பை வைத்து நுணுக்கமாக எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை படக்குழு விளக்கியதாக தெரிவித்தார்.

இந்த காட்சி குறித்து தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தத்ரூபமாக எடுத்துள்ள படக்குழுவினரை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts