ஈழத்தமிழர்களின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தும் காட்சிகள் இடம்பெறாது

800 படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தும் காட்சிகள் இடம்பெறாது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு திரைப்படமாக தயாராக உள்ளது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்தவர் என்பதால் படத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். சமீபத்தில் நடைபெற்ற சென்னை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். ஆட்டத்தின்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில், 2021 இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற உச்சகட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டு போர்க்குற்றங்கள் அரங்கேறின. சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கை பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்ததாக ஐ.நா. அமைப்பு தகவல் வெளியிட்டது. அந்த சமயத்தில் முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். எனவே முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டுமா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இந்நிலையில் 800 படம் தொடர்பான சர்ச்சைகளுக்குப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இந்த படம் இளைய தலைமுறையினர் தங்கள் பயணத்தில் வரும் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அவர்களின் கனவுகளை அடைய ஒரு உத்வேகமாக இருக்கும். இலங்கையில் ஈழத்தமிழர்களின் போராட்டங்களை சிறுமைப்படுத்தும் வகையிலான காட்சியமைப்புகள் இந்த படத்தில் இடம்பெறாது என்று தயாரிப்பாளர்களாகிய நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மேலும் இந்த படம் இலங்கையில் உள்ள தமிழ் திரைப்பட சமூகத்தை பயன்படுத்தி, கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கும். கலை எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, அது உலக மக்களை ஒன்றிணைக்கிறது. கலைஞர்கள் மொத்த உலகிற்கும் சொந்தமானவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts