20 தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செயற்குழு கூட்டத்தின்போது எடுத்த திருத்தங்கள் அடங்கிய எழுத்து மூலமான பத்திரம் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் தற்போது குறித்த மனுக்கள் மீதான விசாரணை இடம்பெற்று வருகிறது.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் இன்று (29) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

——

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ​ஊடக சந்திப்பு இன்று (29) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது இந்த அரசியல் யாப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து 3 இல் 2 பெரும்பான்மையை பெறுவதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பொதுவாக யாப்பு திருத்தத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்..

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் அது தொடர்பான விடயத்தை அரசாங்கம் குறிப்பிடவில்லை. புதிய அரசியல் யாப்பிற்காக அவசியம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

இது பொதுமக்களின் சொத்துக்களை வீண்விரயம் செய்யும் நடவடிக்கையாகும். 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் அமைச்சரவையில் இடம்பெற்றது. இது ஜனநாயக நடைமுறையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts