எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5-ந்தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 23 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையின் உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. விழிப்புடன் இருக்கிறார். சொல்வதை புரிந்து கொள்கிறார். பிசியோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், “அப்பா உடல்நலம் தேறி வருகிறார். நுரையீரல் செயல்பாட்டிலும் முந்தைய 2 நாட்களை விட முன்னேற்றம் உள்ளது. எல்லாம் நல்ல அறிகுறிகளாக உள்ளன. மருத்துவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அப்பாவுக்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts