திருக்குறள்- டெனிஸ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா

தமிழர்களின் அறிவுப்பெருநூலான திருக்குறள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (15.06.2019) டென்மார்க்கு நாட்டில் ஆத்திசூடி டெனிஸ் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவில் திருக்குறளையும் டெனிஸ்மொழியில் வெளியிடவேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ் அன்பர்களால் முன்வைக்கப்பட்டது . அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்

தமிழ் டெனிஸ் சமூக இலக்கிய இணைவகத்தைச் சார்ந்த அன்பர்கள் இப்பெரும்பணியில் ஈடுபட்டு, திருக்குறள் டெனிஸ் மொழிபெயர்ப்பு நூலினை உருவாக்கி, அச்சிட்டு வருகின்றனர்.

திருக்குறள்- டெனிஸ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா வரும் 2021 சனவரி 15 (தைத் திங்கள் 2) ஆம் நாள் திருவள்ளுவர் திருநாளில்டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள ஓகூஸ் நகரில் நடைபெற உள்ளது. டென்மார்க்கு, நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்சு, நோர்வே, செர்மனி, பின்லாந்து, சுவிசர்லாந்து, சுவீடன், கனடா, அமெரிக்கா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து திருக்குறள் ஆர்வலர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், அரசு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

தமிழகத்திற்கும், டென்மார்க்கு நாட்டிற்கும் பலநூறு ஆண்டுகள் தொடர்பு உண்டு. டென்மார்க்கு நாட்டிலிருந்து வருகைதந்து, தரங்கம்பாடியில் தங்கி, அச்சுக்கலைக்கு அடிமனையிட்டவர்கள் டெனிஸ்மொழிக்காரர்கள். அவர்களின் மொழியில் நம் திருக்குறளை மொழிபெயர்த்து வழங்குவதால் டெனிஸ்மொழிக்காரர்களுக்குத் தமிழின் சிறப்பு புலனாகும். மேலும் அந்நாட்டில் வாழ்ந்துவரும் பல்லாயிரக் கணக்கான நம் தமிழ்க் குழந்தைகள் டெனிஸ் மொழியின் ஊடாகவும் திருக்குறளைக் கற்க வழியேற்படும்.

திருக்குறள் டெனிஸ் மொழிபெயர்ப்பை வெளிக்கொண்டுவரும் தமிழ் டெனிஸ் சமூக இலக்கிய இணைவகத்தைச் சார்ந்த அன்பர்களுக்கு எம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்! – பாரதியார்

Related posts