இயக்குனர் ராஜமவுலி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.

பாகுபலி, நான் ஈ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவில் கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து இயக்குனர் ராஜமவுலி தனது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனை தொடர்ந்து 14 நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என உறுதியானது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமவுலி, “இரண்டு வார தனிமைக் காலத்தை முடித்துவிட்டேன். எந்த அறிகுறியும் இல்லை. பரிசோதனை செய்து பார்த்ததில் எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. ப்ளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடிக்கள் எங்கள் உடலில் உருவாகியுள்ளதா என்பதைப் பார்க்க மருத்துவர் எங்களை 3 வாரங்கள் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.

Related posts