“விதியை யாராலும் வெல்ல முடியாது” நடிகர் அமிதாப்பச்சன்

“விதியை யாராலும் வெல்ல முடியாது” என்று நடிகர் அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் ஐஸ்வர்யாராய்க்கும் ஆரத்யாவுக்கும் லேசான அறிகுறிகள் இருந்ததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் நலம்பெற வேண்டி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். அமிதாப்பச்சனுக்கு தற்போது நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வந்தன. இதனை அமிதாப்பச்சன் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது விதி என்று அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் “விதி மிகவும் வலிமையானது. நான் கொரோனா பாதிப்பில் சிக்கியதும் விதியால்தான் நடந்து இருக்கிறது. எல்லாவற்றுக்குமே ஒரு முடிவு இருக்கிறது. கொரோனா என்னை சிறைப்படுத்தி இருப்பதற்கும் ஒரு முடிவு உண்டு. எல்லோருக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் உண்டு. ஆனால் ஏற்கனவே விதிக்கப்பட்ட விதியை வெல்பவர்கள் யாரும் இல்லை. பலர் விதியை அகந்தையால் வெல்ல பார்க்கிறார்கள். அது நடப்பது இல்லை” என்று கூறியுள்ளார்.

Related posts