மணிரத்னம் படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்?

மணிரத்னம் படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் விஜய் தான். அவருடன் இணைந்து நடிக்க தேர்வு செய்யப்பட்ட நாயகன், மகேஷ்பாபு. இருவருமே ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க மறுத்து விட்டார்கள்.

விஜய்யிடம், மணிரத்னம் ஒரு வருடம் தேதிகள் கேட்டதாகவும், அவ்வளவு தேதிகள் கொடுக்க முடியாது என்று கூறி, விஜய் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. “நான் இப்போது வேறு ஒரு ‘ரூட்’டில் போய்க்கொண்டிருக்கிறேன். இதுவே எனக்கு சவுகரியமாக இருக்கிறது” என்றும் அவர் சொன்னதாக பேசப்படுகிறது.

“இரண்டாவது கதாநாயகனாக நடிக்க முடியாது” என்று கூறி, மகேஷ்பாபு நடிக்க மறுத்து விட்டாராம். மகேஷ்பாபு ஒரு படத்துக்கு ரூ.20 கோடி சம்பளம் வாங்கி வருவதாகவும், மணிரத்னம் படக்குழுவினர் அந்த சம்பளத்தை விட குறைவாக சம்பளம் பேசியதாகவும் இன்னொரு தகவல் கூறுகிறது.

இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். ஐதராபாத்திலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதுவரை 40 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள படங்களில், ‘பொன்னியின் செல்வன்’ படமும் ஒன்று!

Related posts