பாதாள் லோக்’, ‘புல்புல்’ வெற்றி

எங்களின் தயாரிப்புகள் அடுத்தடுத்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாங்கள் சரியான பாதையில் செல்வதாக உணர்த்துகின்றன என்று நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.
அனுஷ்கா சர்மா, தனது சகோதரர் கர்ணேஷுடன் இணைந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனம் க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ். சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்துக்காக இவர்கள் தயாரித்திருந்த ‘பாதாள் லோக்’ என்ற வெப் சீரிஸ் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இவர்கள் தயாரித்திருக்கும் ‘புல்புல்’ என்ற திரைப்படம் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தங்களது படைப்புகள் குறித்துப் பேசியுள்ள அனுஷ்கா சர்மா, “எங்களுக்கென்று குறிப்பிட்ட ஒரு வகையில் புதிதாக படங்களை எடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக இருக்கவில்லை. ஆனால் பெண்களைக் கொண்டாடும் கதைகளை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். சினிமாவின் மூலம், வலிமையான, சுதந்திரமான பெண்களைக் காட்ட வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில், புல்புல் எங்கள் சமீபத்திய வெளியீடு. நம் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு சரியாக, சரிசமமாக இருந்ததில்லை. எனவே ஒரு நடிகையாக, எனது தயாரிப்புகளில், இதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சரி செய்வேன் என்று முடிவு செய்தேன்.
‘புல்புல்’ திரைப்படம் ரசிகர்களுக்குப் பிடித்திருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். ஏனென்றால் வழக்கத்துக்கு மாறான படத்தைத் தர வேண்டும் என்று நானும் கர்ணேஷும் மிகக் கடினமாக உழைக்கிறோம். எங்கள் ஒவ்வொரு படைப்பையும் மக்கள் துணிச்சலானது என்று கூறியதே எங்களுக்குப் போதுமான அங்கீகாரம். ‘பாதாள் லோக்’, ‘புல்புல்’ இரண்டுமே நல்ல விமர்சனங்களுடன் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது எங்களுக்குப் பெரிய மைல்கல் தருணம்.
நாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம் என்பதை இந்த வெற்றி காட்டுகிறது. துணிச்சலான திரைப்படங்களைத் தொடர்ந்து எடுப்போம். அன்விதா தத், சுதீப் ஷர்மா, ப்ராசீத் ராய், அவினாஷ் அருண், அன்ஷை லால் போன்ற அற்புதத் திறமைகளைத் தொடர்ந்து ஊக்குவிப்போம். அவர்களின் தைரியமான குரல்கள் சினிமாவில் ஒலித்து மக்களால் கேட்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related posts